இன்பத்தமிழனுக்கு அமைச்சர் பதவி ஏன்?
சென்னை:
கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சந்தோஷத்தில் இருக்கிறார் இன்பத் தமிழன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதியின் அசைக்க முடியாத மனிதராகவும், எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாகவும், எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் நபராகவும் ஒரு காலத்தில் இருந்து வந்ததாமரைக்கனியின் மூத்த மகன்தான் இந்த இன்பத்தமிழன்.
சுயேச்சையாக போட்டியிட்டு வென்று வந்த தாமரைக்கனியைத் தோற்கடிக்க முடியாமல் திணறியமுதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவுக்கு இழுக்கப்பட்டார் இன்பத்தமிழன்.
தந்தையை எதிர்த்து நிறுத்தப்பட்டார். யாரும் எதிர்பாராத வகையில் வெற்றியும் பெற்றார்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் தலைவராகவும் உள்ள இன்பத்தமிழன் தினந்தோறும் தந்தையுடன்மோதி வருகிறார்.
இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் அடிதடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தாமரைக்கனியை மேலும் வெறுப்பேற்றும் வகையில் இன்பத்தமிழனுக்கு அமைச்சர்பதவி தரப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மனம் கோணாத அளவுக்கு நடந்து வரும் இன்பத்தமிழன் தந்தையை பரம்பரைவிரோதி போல பாவித்து மோதி வருகிறார். இன்பத் தமிழனின் இந்த விசுவாசத்திற்கு தான் அமைச்சர்பதவி கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாது, இன்பத்தமிழனுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததற்கு வேறொரு முக்கியக்காரணமும் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்ட திமுக செயலாளராக, முன்னாள் அமைச்சரும், ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்குமிக நெருக்கமானவராகவும் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் பெரும் செல்வாக்கு பெற்ற அவரை எதிர்த்து அரசியல் நடத்த தாமரைக்கனியைவிட்டால் ஆள் கிடையாது. இப்போது தாமரைக்கனி இல்லாத குறையை இன்பத்தமிழன் மூலம்போக்கிக் கொள்ள முடியும் என்று ஜெயலலிதா கருதுகிறார்.
இனி தாமரைக்கனியும், கே.கே.எஸ்.எஸ்.ஆரும் அதிமுகவில் இருந்தபோதே எலியும், புலியுமாகஇருந்தவர்கள். இப்போது இருவரும் திமுகவில் இருக்கிறார்கள். ஆனால் திமுக மாவட்டச்செயலாளர் பதவி தாமரைக்கனிக்குக் கிடைக்கவில்லை.
இந் நிலையில், தாமரைக்கனி அளவுக்கு அரசியல் செய்யும் ஆற்றல் அவரது மகன் இன்பத்தமிழனுக்கு இருப்பதாக நினைக்கும் ஜெயலலிதா, கே.கே.எஸ்.எஸ்.ஆரை எதிர்த்து பாலிடிக்ஸ்செய்யவே இன்பத் தமிழனுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்பத்தமிழனுக்கு எதிராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் தாமரைக்கனியும் கைகோர்த்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்பத் தமிழனை அமைச்சராக்கியதன் மூலம் விருதுநகர் மாவட்ட அரசியலில் தீக்குச்சியை பற்றவைத்து எறிந்துள்ளார் ஜெயலலிதா.