ஒரே நாளில் 306 தமிழர்கள் கைது: இலங்கையில் பதற்றம்
கொழும்பு:
இலங்கையில், குறிப்பாக கொழும்பு நகரில், ஒரே நாளில் 306 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து இலங்கை உள்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா நிருபர்களிடம் பேசுகையில், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தான் கைது செய்து வருகிறோம். சமீபகாலமாக கொலைகள், திருட்டு, வாகனங்கள் கடத்தல் ஆகியவை அதிகரித்துவிட்டன. இந்தக் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மற்றபடி தமிழர்களைக் குறி வைத்தெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
கொழும்பின் மொரட்டுவா, வத்தலே பகுதிகளில் இருந்து விசாரணைக்காக 300 பேர் வரை அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இதில் 34 பேரிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாவும் இலங்கை போலீசார் கூறினாலும் 700 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கைதானவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். இந்தக் கைதுகளால் கொழும்பிலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
போலீசாரும் ராணுவத்தினரும் சேர்ந்து இந்தக் கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
ஆனால், இனக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் எல்லோரும் தங்களை குடும்பத்தினருடன் அருகாமைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அது போன்ற சூழல் இப்போதும் எழுந்துள்ளதா என்று அமரதுங்காவிடம் கேட்டபோது, அப்படிப்பட்ட சூழ்நிலையே இப்போது இல்லை. அப்படிப்பட்ட அச்சமும் தேவையில்லை என்றார்.
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆனந்தராஜையா கூறுகையில், ஆயுதங்களுடன் திரிபவர்கள், குற்றவாளிகளைப் பிடிக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
கொழும்பு முழுவதும் திடீரென ஆங்காங்கே புதிய சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பஸ்கள், வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனையிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications