ரூ. 2 கோடி கேட்டு நக்கீரன் மீது ஜெ.-சசி அவதூறு வழக்கு
சென்னை:
தங்களைப் பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் பத்திரிக்கை மீது ரூ.2 கோடிஇழப்பீடு கேட்டு முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பொடா வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது முதல்வர் ஜெயலலிதா, அவரது உயிர்த் தோழி சசிகலா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்தனர்.
நக்கீரன் கோபால் தங்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செய்திகளை பத்திரிகையில் வெளியிட்டு வருவதாகவும், அதற்காக ரூ.2 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ற்ேற நீதிபதி இது குறித்து விளக்கமளிக்குமாறு கோபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை பற்றி செய்தி வெளியிடும் போது அதன் நம்பகத்தன்மையை அவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்தாமல் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
நக்கீரன் தவிர, இந்து நாளிதழ் மற்றும் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீதும் பல அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது குறிப்பிட்டுள்ளது.