தமிழக விவசாயிகள் நிலை படுமோசம்: கர்நாடகக் குழு ஒப்புதல்
தஞ்சாவூர்: தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நிலைமை படுமோசமாக உள்ளது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல்அவதிப்படுகிறார்கள் என்று கர்நாடக விவசாயிகள் குழுத் தலைவர் புட்டண்ணய்யா வேதனையுடன்தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் புட்டண்ணய்யாவின் தலைமையில் தமிழகம்வந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை அவர்கள் சுற்றிப் பார்த்து இங்குள்ள நிலை குறித்து ஆய்வுமேற்கொண்டனர்.
காவிரி கடைமடை பகுதியான திருவாரூக்கும் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புட்டண்ணய்யா,நாங்கள் நினைத்தது போல இங்கு நிலைமை இல்லை. மிகவும் மோசமாக உள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் சுத்தமாக தண்ணீர் இல்லை. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது என்றார்.
தமிழக காவிரி டெல்டா பகுதியில் 3 போக சாகுபடி நடப்பதாக கர்நாடகத்தில் கருத்து நிலவுவது பொய்யானதுஎன்பதை தற்போது கர்நாடக விவசாயிகள் குழு புரிந்து கொண்டிருப்பதாக அவர்களுடன் சென்ற தமிழகவிவசாயிகள் குழுவைச் சேர்ந்த ஒரு விவசாயி தெவித்தார்.
காவிரிப் பிரச்சனைக்கு அரசியல், நீதிமன்றம் தவிர்த்து விவசாயிகளைக் கொண்டே தீர்வு காணும் முயற்சியில் சிலசமூக சேவை அமைப்புகள் இறங்கியுள்ளன. இரு மாநில விவசாயிகளையும் சந்தித்துப் பேச வைத்தும், இரு மாநிலவிவசாயிகளும் ஒருவரது நிலையை ஒருவர் நேரில் பார்வையிடவும் இந்த அமைப்புகள் முயற்சி எடுத்துள்ளன.
இதன்படி தமிழக விவசாயிகள் கர்நாடகம் வந்து சென்றனர். இப்போது கர்நாடக விவசாயிகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.