அண்ணாச்சி ராஜகோபால் மீது இறுகும் போலீஸ் பிடி
சென்னை:
ஜீவஜோதியை சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் கடத்திய வழக்கை மகளிர் நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜீவஜோதியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்றதாக ராஜகோபால் மீது ஒரு வழக்கு உள்ளது. இது தவிர அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக் கொன்ற வழக்கும் உள்ளது. இந்த இரு வழக்குகளிலும் அண்ணாச்சி ராஜகோபால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
இந் நிலையில் பிரின்ஸ் கொலை வழக்கில் தனக்கு ஆதரவாக சாட்டி கூறச் சொல்லி ஜீவஜோதியை மிரட்டியதாக கடந்த வாரம் இன்னொரு வழக்கும் ராஜகோபால் மீது பதிவு செய்யப்பட்டது. அதில் ராஜகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திலும், ஜீவஜோதியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜீவஜோதி ஆஜராகி சாட்டி சொல்ல இருந்தார்.
இந் நிலையில் இந்த இரு வழக்குகளிலும் பெரும்பாலான சாட்சிகள் ஒன்றாகவே இருப்பதால் இரு வழக்குகளையும் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்திலேயே சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி போலீசார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி கனகராஜ், மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜீவஜோதி கடத்தல் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
ஆமேலும் ஜீவஜோதியை மீண்டும் மிரட்டியது, அவரைக் கடத்த முயன்றது போன்றவற்றுக்காக ராஜகோபால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு தரப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறும் கோரி போலீசார் இன்னொரு மனுவும் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீது திங்கள்கிழமை விசாரணை நடக்கவுள்ளது.
இதன்மூலம் ராஜகோபாலின் மீதான போலீசாரின் பிடி இறுகி வருகிறது.
ஜீவஜோதியைக் கடத்தித் திருமணம் செய்ய முயன்ற வழக்கில் ராஜகோபால் தப்பினாலும் பிரின்ஸ் கொலை வழக்கிலும், ஜீவஜோதியை இரண்டாவது முறையாக மிரட்டிய வழக்கிலும் அவர் தப்ப முடியாது என போலீசார் கூறுகின்றனர்.
வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிப்பதன் மூலம் விரைவாகவே அவருக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்கின்றனர்.