சட்டை கிழிப்பு, வேஷ்டி அவிழ்ப்பு, கைகலப்பு ..
சென்னை:
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இரண்டாவது நாளாகமீண்டும் அடிதடி நடந்தது.
வாசன் கோஷ்டியைச் சேர்ந்த சிலர் உண்ணா விரதப் போராட்டம் நடத்த பதிலுக்கு இளங்கோவன் கோஷ்டியினர்உண்ணும் விரதத்தில் இறங்கி வாழைப் பழம், முட்டை பிரியாணி சாப்பிட, பெரும் மோதல் ஏற்பட்டது.
சத்தியமூர்த்தி பவனே போர்க்களம் போல காணப்பட்டது. அவிழ்ந்த வேஷ்டிகள், கிழந்த சட்டைகளுடன் பலதொண்டர்கள் வெளியேறினர்.
காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் வண்ணாரப்பேட்டையில் உடற் பயிற்சி கூடம் தொடங்கப்பட்டது.இளங்கோவன் கோஷ்டியினர் இதனைத் தொடங்கியுள்ளனர். இதன் திறப்பு விழாவுக்கு வட சென்னை மாவட்டஇளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லப்பா அழைக்கப்படவில்லை. காரணம், அவர் வாசன் கோஷ்டிக்காரர்.
விழாவுக்கு தன்னை அழைக்காதது ஏன் என்று கேட்டு சத்தியமூர்த்தி பவனில் இருந்த நிர்வாகிகளிடம்கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்லப்பாவின் சட்டையைக் கிழித்து அனுப்பினர்இளங்கோவனின் ஆதரவாளர்கள்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது ஆதரவாளர்களோடு சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் தனதுஆட்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். வாயில் கருப்புத் துணியைக் கட்டியபடி உண்ணாவிரதம் இருந்தஅவர்களுக்குப் போட்டியாக இளங்கோவன் கோஷ்டியினர் உண்ணும் விரதம் மேற்கொண்டனர்.
பெரிய பெரிய வாழைத்தார்களுடன் அமர்ந்த அவர்கள் வாழைப் பழத்தை சாப்பிட்டவாறும், உண்ணாவிரதம் இருந்தவர்களை நக்கலடித்துக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள்.
இதையறிந்த கட்சி நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அப்போது இருதரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சிலரது சட்டைகள் கிழிக்கப்பட்டன, வேஷ்டிகள்அவிழ்க்கப்பட்டன, சிலர் தாக்குதலுக்கும் ஆளானார்கள். மொத்தத்தில் பெரிய மோதலே நடைபெற்றது.
காங்கிரஸாரின் இந்த கோஷ்டி மோதலை சாலையில் சென்ற பொதுமக்களும் கூடி நின்று வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றனர். பின்னர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மெயப்பன் வந்து அனைவரையும் கலைந்துபோகுமாறு செய்தார். பின்னர் மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.