டாக்டர்களுக்கு ரேட்டிங் கொடுக்கக் கூடாது .. சன் டிவிக்கு கோர்ட் உத்தரவு
சென்னை:
சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சிறந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவமனைகள் குறித்த கருத்துக்கணிப்புநிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனைகளுக்கு ரேட்டிங், தரப்புள்ளிகள் கொடுக்கக் கூடாது என்று சென்னைசிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சன் டிவியில் சமீப காலமாக கருத்துக் கணிப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழகத்திலேயே சிறந்த 5 கல்விநிலையங்கள், பின்னர் சிறந்த 5 ஜவுளிக் கடைகள் என்ற வரிசையில் திங்கள்கிழமை முதல் சிறந்த மருத்துவர்கள்,சிறந்த மருத்துவமனைகள் யார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் சிறந்த டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு தரப்புள்ளிகள், ரேட்டிங் ஆகியவற்றைக் கொடுப்பதைக்கண்டித்து இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் டாக்டர் ரங்கநாதன் சென்னை சிட்டி சிவில்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், மருத்துவ சட்ட நெறிமுறைகளுக்கு புறம்பாக டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு ரேட்டிங் கொடுப்பதுகண்டிக்கத்தக்கது. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து 8-வதுநீதிமன்ற உதவி நீதிபதி முகைதீன் பிச்சை உத்தரவிட்டிருந்தார்.
நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேட்டிங் கொடுக்காமல் இந்த நிகழ்ச்சியைஒளிபரப்புவதில் ஆட்சேபனை இல்லை என்று டாக்டர் ரங்கநாதனின் வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதை ஏற்ற சன் டிவியின் வழக்கறிஞர் வில்சன், சிறந்த டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு ரேட்டிங் கொடுக்கப்படமாட்டாது. மாறாக, தலைசிறந்த என்ற வார்த்தையே பயன்படுத்தப்படும் என்றார்.
பின்னர் இந்த வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி முகைதீன் பிச்சை, ரேட்டிங் கொடுக்கக் கூடாது.அப்படி செய்வதாக இருந்தால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பலாம் என்று கண்டிப்புடன் கூறி வழக்கைஒத்திவைத்தார்.