பெப்சி, கோக்கில் நச்சு இல்லை- மத்திய அரசு: பணம் கைமாறிவிட்டதாக எதிர் கட்சிகள் புகார்
டெல்லி:
பெப்சி மற்றும் கோகோ கோலாவில் அதிக அளவிலான நச்சுப் பொருள்கள் இல்லை என மத்திய அரசுமறுத்துள்ளது.
இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்தக் குளிர் பானங்களில் அதிக அளவிலான நச்சுத் தன்மை இருப்பதைசமூக நல அமைப்பான சென்டர் ஆப் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட் அமைப்பு கண்டுபிடித்தது.
இதையடுத்து இந்த பானங்களின் விற்பனை மடமடவென சரிந்தது. நாடு முழுவதும் இவைகளுக்கு எதிராகபோராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த பானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைஎழுந்துள்ளது.
ஆனால், இந்த பானங்களை சோதனை செய்துவிட்டே எந்த முடிவும் எடுக்க முடியும் என மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து இவை மத்திய அரசின் ஆய்வகங்களால் சோதனையிடப்பட்டன. சோதனையில், இவற்றில் நச்சுத்தன்மை கொண்ட பூச்சி மருந்துகள் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், ஆனாலும் அவை மிக மிகக் குறைவானஅளவிலேயே இருப்பதாகவும், சமூக நல அமைப்பு சுட்டிக் காட்டும் அளவுக்கு அதிகமான நச்சுப் பொருள்கள்இல்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பேசுகையில், பெப்சி மற்றும் கோக்கின் 12வகையான குளிர் பானங்களில் 9ல் எந்தப் பிரச்சனையும் இல்லை. மற்ற 3ல் சிறிது நச்சு உள்ளது. ஆனால், சமூக நலஅமைப்பு சொல்லும் அளவுக்கு எல்லாம் நச்சு இல்லை என்றார்.
சுஷ்மாவின் பேச்சுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி. சத்யபிரதா சதுர்வேதிபேசுகையில், இவ்வாறு உண்மையை மறைப்பதற்கு பெப்சி, கோக்கிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்றுகேட்டார்.
பிற எதிர்க் கட்சிகளும், பா.ஜ.க. அரசு கோடிக்கணக்கில் லஞ்சமா வாங்கிக் கொண்டு அந்த நிறுவனங்களுக்குஆதரவாக உண்மையை மறைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டின.
இது குறித்து உண்மை நிலையை அறிய கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவைகோரிக்கை விடுத்தன.
இதையடுத்து 15 எம்.பிக்கள் கொண்ட குழுவை அமைக்கப் போவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
பெப்சி மற்றும் கோக்கில் நச்சுப் பொருள்கள் இருப்பது உண்மையா, எந்த அளவுக்கு உள்ளது. இதைத் தடுப்பதுஎப்படி, குளிர்பானங்களுக்கும் தரச் சான்றிதழ் வழங்குவது எப்படி போன்ற விவரங்களை இந்தக் குழு ஆராய்ச்சிநிலையங்களின் உதவியுடன் ஆராயும்.
இதற்கிடையே தங்களது பானங்களில் அதிக அளவில் நச்சு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு பெப்சிமற்றும் கோக் நிறுவனங்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
வியாபாரிகள் சங்க தலைவர் கோரிக்கை:
தமிழகத்தில் உள்ள வியாபாரிகள் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்க வேண்டாம் எனதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, வேளச்சேரியில், கோக், பெப்சிக்கு எதிராக இன்று போராட்டம் நடந்தது. கோக், பெப்சி பாட்டில்களைஉடைத்தும், அவற்றை சாக்கடையில் கொட்டியும் போராட்டம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் வெள்ளையன் பேசுகையில், இந்த குளிர்பானங்களை பொதுமக்கள் ஆதரிக்கக்கூடாது, வியாபாரிகளும் இவற்றை விற்கக் கூடாது. நச்சு கலந்த இந்த குளிர்பானங்களுக்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரி பிரதமர் வாஜ்பாயை சந்திக்க உள்ளோம் என்றார்.