இந்து, முரசொலி அலுவலகங்களில் போலீஸ் திடீர் ரெய்டு !
சென்னை:
சட்டசபையில் இந்து ஆசிரியர்கள், நிருபர்களுக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில், இந்து பத்திரிக்கையின் அலுவலகத்தில் போலீஸார் எந்தவித ஆவணங்களையும் காட்டாமல் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர் சின்னராஜ், உதவி ஆணையர் சண்முகம் ஆகியோரது தலைமையில் ஒரு போலீஸ் படை மாலை 5.30 மணியளவில் அண்ணாசாலையில் உள்ள இந்து அலுவலகத்திற்கு விரைந்தது.
ஆசிரியர் ராம் உள்ளிட்ட 5 பேரையும் தேடுவதாகக் கூறிக் கொண்டு எந்தவித அனுமதியும் இல்லாமல், தங்களது அடையாளத்தையும் காட்டாமல் அலுவலகத்திற்குள் அவர்கள் ஊடுறுவி சோதனை நடத்தத் தொடங்கினர்.
இதனால் இந்து அலுவலகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஊழியர்கள் அனைவரும் ஒன்றாகத் திரளத் தொடங்கினர். அலுவலகத்தின் ஒவ்வொரு அறையாக சென்ற போலீஸார் ஆசிரியர் ரவியின் அறைக்குள் செல்ல முயன்றபோது, தகவல் அறிந்த பிரதான ஆசிரியர் என்.ராம் அங்கு வந்தார்.
காவல்துறை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய அவர், யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தீர்கள், உள்ளே வருவதற்கு அனுமதி யாரிடம் பெற்றீர்கள், கைது செய்வதற்கு வாரண்ட் உள்ளதா என்று சரமாரியாக கேட்டார். இதற்குப் பதில் சொல்ல முடியாமல் போலீஸ் அதிகாரிகள் விழித்தனர்.
பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றனர். ஆனால் 2 மணி நேரத்தில் அவர்கள் கைது வாரண்ட்டுடன் திரும்ப வந்தனர். இந்த முறையும், நீங்கள் தேடும் நபர்கள் யாரும் இங்கு இல்லை என்று ராம் போலீஸாரிடம் தெரிவித்தார். ஆனால் உள்ளேதான் அவர்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது என்று போலீஸார் கூறவே, ஒவ்வொரு அறையாக அவர்களை அழைத்துச் சென்று காண்பித்தார் ராம். போலீஸார் தேடிய யாரும் அங்கு இல்லை.
இதையடுத்து அவர்கள் திரும்பிச் செல்ல வெளியே வந்தனர். ஆனால் இந்து ஊழியர்கள் அனைவரும் வெளியே கூடி நின்று போலீஸாரை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரை பத்திரமாக ஆசிரியர் ராமே அழைத்துச் சென்று வெளியே விட்டு விட்டு வர நேரிட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராம் மிகவும் ஆவேசமாக காணப்பட்டார். இந்த தவறான செயலுக்குக் காரணமானவர்கள் கண்டிப்பாக அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். எந்தவித அனுமதியும் இல்லாமல், அலுவலகத்திற்குள் ஊடுறுவி ஊழியர்களை மிரட்டியுள்ளார்கள். தலைமை நிருபர் ஜெயந்த்தின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியை மிரட்டியுள்ளார்கள். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் புகார் செய்யவுள்ளோம்.
அரசிடம் எந்தவித முறையீட்டையும் செய்யப் போவதில்லை. நீதிமன்றத்தை அணுகுவோம். அதேபோல முன் ஜாமின் கேட்கவும் போவதில்லை. அவர்கள் கைது செய்யட்டும், என்னதான் செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்ப்போம் என்றார்.
முரசொலி அலுவலகத்தில் ...
அதே போல முரசொலி அலுவலகத்திலும் போலீஸார் நேற்றிரவு சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications