சோனியா பிரதமராவதில் தவறில்லை: திமுக
சென்னை:
சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு வருவதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று முதல் முறையாக திமுக மறைகமாகக் கூறியுள்ளது.
இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கருத்துப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரர் என கடுமையாக விமர்சித்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. வரும் மக்களவைத் தேர்தலில் இதை பெரிய விவகாரமாக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில் வெளிநாட்டுக்காரரான சோனியா காந்தியையோ அவரது மகள் பிரியங்காவையோ பிரதமராக ஏற்க முடியாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் கூறி வருகிறார். அவரது ஆதரவாளரான மாநிலங்களைத் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா சமீபத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டது.
இந் நிலையில் சோனியா காந்திக்கு ஆதரவாக திமுக முதல்முறையாக களத்தில் குதித்துள்ளது.
முரசொலியில் தினமும் வெளியாகும் பட்டிக்காடா, பட்டணமா என்ற கருத்துப் பட பகுதியில், சோனியா காந்தி அல்லது பிரியங்காவை பிரதமர் பதவி ஏற்க முடியுமா என்று பட்டிக்காட்டு நபர் கேள்வி கேட்கிறார்.
அதற்கு பட்டணத்து நபர், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பெரும்பான்மை உள்ள கட்சியோ அல்லது பெரும்பான்மை பலம் உள்ள கூட்டணியின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அவர் பிரதமராகப் பதவியேற்பார். அதை யாரும் தடுக்க முடியாது என்று பதில் சொல்வது போல கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சோனியா காந்தி ஏற்கனவே இந்தியக் குடியுமை பெற்று இந்தியராகி விட்டார். பிரியங்கா பிறப்பால் முழு இந்தியர்தான். எனவே இதை யாரும் பிரச்சினையாக்க முடியாது என்றும் பட்டணத்துக்காரர் கூறுவது போல இந்தக் கருத்துப் படத்தில் வாசங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுவரை சோனியா காந்தியை பிரதமராக ஏற்பது தொடர்பாக திமுக வெளிப்படையாக கருத்து தெரிவித்ததில்லை. மாறனின் மறைவையடுத்து திமுகவின் நிலைப்பாடு தேசிய அளவில் எப்படி இருக்கும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அக் கட்சி காங்கிரஸ் பக்கமாக சாய்வதில் தீவிரமாக இருப்பதையே முரசொலி கார்ட்டூன் காட்டுகிறது.
சோனியா பிரதமராக இதுவரை வேறு எந்தக் கட்சியும் வெளிப்படையான ஆதரவு தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாறனுக்கு30ம் தேதி நினைவஞ்சலி:
இதற்கிடையே மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு வரும் 30ம் தேதி சென்னையில் திமுக சார்பில் புகழஞ்சலிக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய தினம் அண்ணா அறிவாலய வளாகத்தில் இக் கூட்டம் நடக்கிறது. இதில், கருணாநிதி, இல.கணேசன்(பா.ஜ.க), ஜி.கே.வாசன் (காங்கிரஸ்), டாக்டர் ராமதாஸ் (பாமக), வரதராஜன் (சிபிஎம்), நல்லகண்ணு (சிபிஐ),ப.சிதம்பரம் (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை), கண்ணப்பன் (மக்கள் தமிழ் தேசம்), ஆர்.எம்.வீரப்பன் (எம்.ஜி.ஆர். கழகம்), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி) உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications