ராஜகோபால்தான் எனது கணவரைக் கொன்றார்: ஜீவஜோதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சரவண பவன் ஹோட்டல் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் தான் எனது கணவர் கொலைக்குக் காரணம் என்று ஜீவஜோதி நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜீவஜோதி அளித்த வாக்குமூலத்தின் முழு விவரம்:

பிழைப்புக்காக ஊரில் உள்ளசொத்துக்களை விற்று கடந்த 1994ம் ஆண்டு சென்னைக்கு குடும்பத்துடன் வந்தேன். எங்களது சித்தப்பா தட்சிணாமூர்த்தி, கே.கே.நகரில் உள்ள ஹோட்டல் சரவண பவனில் மேலாளராக இருந்து வந்தார்.

அவரிடம் சென்று, கையில் உள்ள ரூ. 4.5 லட்சம் பணத்தை வைத்து தொழில் செய்யலாம் என்றிருக்கிறோம் என்று தெரிவித்தோம்.

அந்தப் பணத்தை தனது முதலாளி ராஜகோபாலிடம் கொடுத்து வைத்து அதன் மூலம் வரும் வட்டியைப் பெற்று குடும்பம் நடத்துமாறு சித்தப்பா அறிவுறுத்தினார். அதன்படி பணத்தை ராஜகோபாலிடம் கொடுத்தோம்.

மாதந்தோறும் ரூ. 7,000 வரை வட்டி போல கொடுக்க ஆரம்பித்தார் ராஜகோபால். பின்னர் அசோக் நகரில் உள்ள சரவண பவன் ஹோட்டலில் எனது அப்பாவுக்கு வேலை போட்டுக் கொடுத்தார். இதையடுத்து கே.கே.நகரில் உள்ள தனது ஊழியர் குடியிருப்பிலேயே எங்களையும் தங்க அனுமதித்தார் ராஜகோபால்.

அந்தச் சமயத்தில், எனது தம்பிக்கு டியூஷன் எடுப்பதற்காக பிரின்ஸ் சாந்தகுமார் வீட்டுக்கு வந்து செல்ல ஆரம்பித்தார். அப்போது அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிக்கத் தொடங்கினோம்.

ஆனால் ராஜகோபாலுக்கு சாந்தகுமாரைப் பிடிக்கவில்லை. அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிடும்படி வற்புறுத்தினார். இதை ஏற்க எனது தந்தை மறுத்து விட்டார்.

பின்னர் ராஜகோபாலிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை எனது தந்தை திருப்பி வாங்கினார். அதன் மூலம் லாரி பிசினஸில் ஈடுபட்டார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டது. இந் நிலையில் சாந்தகுமார் வீட்டுக்கு வருவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ராஜகோபால் கூறினார்.

இதையடுத்து எனது தந்தை சரவண பவனில் பார்த்து வந்த வேலையை விட்டார். எம்.ஜி.ஆர். நகரில் வேறு வீடு பார்த்து குடியேறினோம். வந்து விட்டோம். பின்னர் எனது தந்தை வேலைக்காக மலேசியா சென்று விட்டார்.

இந் நிலையில் பிரின்சுடனான எனது காதலை எனது தாயார் எதிர்த்தார். இதனால் நானும், சாந்தகுமாரும் அண்ணா நகரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் மதுரை சென்று விட்டோம். அங்கு சாந்தகுமாரின் பெற்றோர் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவைத் தொடர்பு கொண்டேன். அவர் மதுரைக்கு வந்து எங்களை ஏற்றுக் கொண்டு சென்னைக்கே திரும்ப அழைத்து வந்தார். இங்கு வந்த பிறகு வேளச்சேரியில் ஒரு வீட்டில் குடியேறினோம்.

டிராவல்ஸ் பிசினஸ் செய்யலாம் என்று நினைத்தோம். கையில் பணமில்லாததால், பணத்திற்காக ராஜகோபாலையே அணுகினோம். அவரும் கடன் கொடுத்தார்.

ராஜகோபாலே தலைமை தாங்கி டிராவல்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் அடிக்கடி எனது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார் ராஜகோபால். எனக்குக் கட்டளையிடுவது போலவே அவரது பேச்சுக்கள் இருக்கும்.

எனது கணவரிடமிருந்து என்னைப் பிரிக்கும் நோக்கிலேயே அவரது பேச்சுக்கள் இருக்கும். ஒரு முறை எனது கணவருக்கு எய்ஸ்ட் நோய் இருப்பதாகவும், என்னை சினிமாவில் சேர்த்து விட பிரின்ஸ் முயற்சிப்பதாகவும் கூறினார். மேலும் நீ சினிமாவில் சேருவது எனக்குப் பிடிக்கவில்லை என்றார்.

அதுபற்றி நான்தான் கவலைப்பட வேண்டும், நீங்கள் கவலைப்பட அவசியமில்லை என்று நான் கூறிவிட்டேன்.

பின்னர் கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ராஜகோபாலும், அவரது ஆட்களும் எங்களது வேளச்சேரி வீட்டுக்கு வந்திருந்தனர். பேச வேண்டும் என்று கூறி என் கணவர், தாய், தந்தை மற்றும் என்னை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

அசோக் நகரில் உள்ள சரவண பவன் குடோனுக்குக் கொண்டு சென்று அங்கு வைத்து எனது கணவரை ராஜகோபாலும், அவரது அடியாட்களும் அடித்து, உதைத்தனர். பின்னர் எனக்கு ஒத்துப் போய் விடு என்று மிரட்டினார். நான் உன்னை 3-வது திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி எங்களை விட்டு விட்டார்.

இது தொடர்பாக அப்போதைய போலீஸ் கமிஷ்னரிடம் புகார் செய்தோம். இதையறிந்த ராஜகோபால் தனது அடியாட்களுடன் மீண்டும் எங்களை மிரட்டினார். போலீஸிலா புகார் செய்கிறீர்கள் என்று மிரட்டிய அவர்கள், என்னையும், கணவர் சாந்தகுமாரையும் காரில் கடத்திச் சென்றனர்.

திருநெல்வேலிக்குக் கடத்திச் சென்ற பின் என்னை விட்டு விட்டு, கணவரை வேறு எங்கோ அழைத்துச் சென்று விட்டனர்.

2001, அக்டோபர் 21ம் தேதி எனது கணவர் போன் முலம் தொடர்பு கொண்டு, அண்ணாச்சியின் ஆளான டேனியல் (கடத்திச் சென்றவர்களில் ஒருவன்) என்னை மும்பைக்கு சென்றுவிடுமாறு மிரட்டுவதாகக் கூறினார்.

அதன் பின்னர் அவர் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. இதையடுத்து நவம்பர் 10ம் தேதி நான் போலீஸில் புகார் கொடுத்தேன்.

டிசம்பர் 1ம் தேதி கொடைக்கானலில் அடையாளம் தெரியாத பிணம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்து அங்கு சென்று அது என் கணவர்தான் என்று அடையாளம் காட்டினேன். எனது கணவரைக் கடத்திச் சென்று கொலை செய்து கொடைக்கானலில் பிணத்தைப் போட்டது ராஜகோபாலும், அவரது அடியாட்களும்தான்.

இவ்வாறு கண்ணீர் மல்க சாட்சியம் அளித்தார் ஜீவஜோதி.

இன்று அவர் தொடர்ந்து சாட்சியளிக்கையில், என்னை மகளாக நினைத்துத் தான் ராஜகோபால் உதவி செய்தவதாக நினைத்தேன். ஆனால், என் தாயாரிடம் என்னை அவருக்கு மூன்றாவது மனைவியாக கட்டி வைக்குமாறு கோரியது பின்னர் தான் தெரியவந்தது என்றார்.

இதையடுத்து ராஜகோபாலின் வழக்கறிஞர் ஜீவஜோதியை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது ராஜகோபாலுக்கும் அவருக்கும் இடையிலான உறவுகள் குறித்த கேள்விகளுக்கு ஜீவஜோதி பதில் தர முடியாமல் திணறினார். பல கேள்விகளுக்கு நினைவில்லை என்று பதில் தந்தார்.

ராஜகோபாலிடம் ஜீவஜோதியின் தாயார் நீண்ட நேரம் தொலைபேசியில் பலமுறை பேசியது குறித்தும் தனக்கு விவரமாக ஏதும் தெரியாது என்றார்.

இதற்கிடையே, ஜாமீன் கோரி ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+