ஜெயலலிதா- சந்திரபாபு நாயுடு சந்திப்பு
சென்னை:
கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் வழங்குவது தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இப்போது ஜெயலலிதா ஹைதராபாத்தில் உள்ள தனது திராட்சைத் தோட்டத்தில் சசிகலாவுடன் ஓய்வெடுத்து வருகிறார்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போக ஆரம்பித்துள்ளன. இப்போது சென்னை ஏரிகளில் உள்ள நீரைக் கொண்டு நகருக்கு அடுத்த மாத பிற்பகுதி வரைதான் குடிநீரை வினியோகிக்க முடியும். இதனால் சென்னை நகரில் வரலாறு காணாத வறட்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே கண்டலேறு அணையிலிருந்து 3 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நாயுடுவுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக நேரிலும் நாயுடுவைச் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது உடன் இருப்பதற்காக தமிழகத் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்றே ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
மாலை 3 மணிக்கு நாயுடுவை ஜெயலலிதா சந்தித்துப் பேசுகிறார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அதிகாரிகள் சென்னை திரும்பி விடுவர். ஜெயலலலிதா, தனது தோழி சசிகலாவுடன் தொடர்ந்து தனது திராட்சைத் தோட்ட பங்களாவில் தங்கியிருப்பார்.
டான்சி தீர்ப்பு வெளியானவுடன் ஹைதராபாத் சென்ற ஜெயலலிதா இன்று நாயுடுவை சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications