மாலத் தீவு சிறையில் தமிழக வாலிபர் அடித்துக் கொலை: மரணத்தின் பிடியில் மேலும் 2 தமிழர்கள்
திண்டுக்கல்:
கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு தமிழர்கள் மரணதண்டனையை எதிர் நோக்கி மாலத்தீவுகள் சிறைச் சாலையில் அடைபட்டுள்ளனர். மேலும் ஒரு வாலிபர் சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மாலத் தீவுகளுக்கு வேலைக்காக தஞ்சாவூரைச் சேர்ந்த கமல், திருச்சியைச் சேர்ந்த சரவணன், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜன் ஆகியோர் சென்றனர். அங்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
இந் நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே ஒரு பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, போலீஸார் இந்த மூவரையும் கைது செய்தனர். பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததாக இவர்கள் மேல் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சரவணனிடம் ஒப்புதல் வாக்குமூலம் கேட்டு அந் நாட்டு சிறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கினர். இதில் சிறைச் சாலையிலேயே அவர் இறந்தார்.
இந் நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ராஜனின் தாயார் தன் மகனை காப்பாற்றக் கோரி திண்டுக்கல்லில் உள்ள அமைதிக் குழு என்ற அமைப்பின் தலைவர் பால் பாஸ்கர் என்பவரை அணுகினார். இதன் பின் பிரதமர் வாஜ்பாய், முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இது குறித்து பால் பாஸ்கர் கூறுகையில், குற்றம் தொடர்பாக தமிழர்களிடம் பாரான்ஸிக் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை. நிரபாரதிகள் என்பதை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமலேயே, அவர்களை அடித்துத் துன்புறுத்தி, குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்துள்ளனர்.
இப்போது நாங்கள் மாலத்தீவுகளில் ஒரு சட்ட அமைப்பு மூலமாக இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
போதை மருந்து கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மலேசியாவில் 8 தமிழர்கள் சிறையில் வாடுவதும், இவர்கள் அனைவரையும் காப்பாற்றிக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாஜ்பாயிக்கு கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications