கள்ளச் சாராய சாவுகளால் இருள் கப்பிய கிராமங்கள்
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கள்ளச் சாராயம் குடித்ததால் 15 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு சோகத்தில் மூழ்கிப் போயுள்ளன சுற்றுப்பட்டு கிராமங்கள்.
கிராமத்துக்கு 2 பேர், 3 பேர் என உயிரிழப்புகள் நடந்துள்ளதால் பொன்னேரியைச் சுற்றியுள்ள லட்சுமிபுரம், கண்டிகை, பெரும்பேரம்பாக்கம், லிங்கப்பையன்பேட்டை, அனுப்பம்பட்டு, பெரும்பேடுகுப்பம், கம்மாளபாளையம் ஆகிய கிராமங்களில் எங்கு பார்த்தாலும் ஒப்பாரிச் சத்தம் தான் கேட்கிறது.
40க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சாவு எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போவதால் அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
குடித்தவர்களில் பலரும் குடும்பத் தலைவர்கள். இவர்களில் பலருக்கும் கண் பார்வை பறிபோயுள்ளதால் இந்தக் குடும்பங்களின் எதிர்காலமும் இருண்டு போயுள்ளது.
சாவுகளையடுத்து உறவினர்கள் குவிந்துள்ளதால் இந்தக் கிராமங்களில் எங்கு பார்த்தாலும் அழுகை ஒலியே கேட்டவண்ணம் உள்ளது.
இதற்கிடையே ஆரணி ஆற்றங்கரையில் இந்தச் சாராயத்தை விற்ற பாரூக் என்பவன் தலைமறைவாகிவிட்டான். அவரது மனைவி அனுசுயா, கூட்டாாளி மனோகரன் ஆகியோர் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.
சாராயத்தைத் தடுக்கத் தவறிய இரு எஸ்.ஐகளை மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்துள்ளார். அங்கு பதற்றமான சூழல் நிலவுதால் கலெக்டர் சந்திரமோகன், மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. உபாத்யாயா, எஸ்.பி. வரதராஜூ தலைமையிலான அதிகாரிகள் குழு அங்கு முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்தது.
இப்போது பெரும் எண்ணிக்கையிலான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் சாராயம் வெள்ளமாய் ஓடியுள்ளது. ஆற்றின் கரையில் ஊறுகாய், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆயிரக்கணக்கில் கிடக்கின்றன. இங்கு சாராயம் விற்பது தெரிந்திருந்தும், சாராய வியாபாரிகள் போடும் 100, 500 பிச்சையை தலையை சொறிந்து வாங்கிக் கொண்டு கள்ளச் சாராயத்தைத் தடுக்காமல் விட்டுள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications