ரோடுகளில் நின்று கட்டிங் போடும் குடிமகன்கள்: மக்கள் போராட்டம் தீவிரமாகிறது
சென்னை:
நேற்று திறக்கப்பட்ட அரசு மதுக் கடைகளில் விற்பனை படு ஜோராக நடந்தாலும், பல இடங்களில் போதிய அளவுக்கு ஸ்டாக் இல்லை. மேலும் பல இடங்களில் கடை இருந்தாலும் பார் இல்லை. இதனால் ரோட்டோரத்திலேயே நின்று குடிமகன்கள் ஊத்திக் கொண்டனர்.
சில கடைகள் தவிர தனியார் மது விற்பனைக் கடைகள் வெள்ளிக்கிழமையுடன் மூடப்பட்டுவிட்டன. நேற்று முதல் அரசின் டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனை தொடங்கியுள்ளது.
சென்னையில் மட்டும் 1,023 கடைகள் தொடங்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கடை திறக்க இடம் கிடைக்காததாலும், ஊழியர்களை நியமிக்க முடியாததாலும் திட்டமிட்டபடி அத்தனை கடைகளையும் தொடங்க முடியவில்லை. இதனால் பாதி கடைகள்தான் திறக்கப்பட்டன.
அட்வான்ஸ் மற்றும் வாடகையை அரசு குறைவாகவே வழங்கும் என்பதால் மிக முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் தங்களது கடைகளை அரசுக்கு வாடகைக்கு விட தனியார் மறுத்து வருகின்றனர்.
இதனால் உள்ளடங்கிய மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ன. இங்கு ரோட்டிலேயே நின்று குடிமகன்கள் ஊத்திக் கொள்வதால் அதை எதிர்த்து ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியில், வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் புதிய கடை திறக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து இன்று ஏராளமான பெண்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். கடையை திறக்க விடாமல் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கடையை அதிகாரிகள் மூடினர்.
அதேபோல, மதுரையில் கிருஷ்ணாபுரம் காலனி மற்றும் சிம்மக்கல் ஆகிய பகுதிகளிலும் பெண்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
சிம்மக்கல் பகுதியில் கோவிலுக்கு அருகிலேயே புதிய கடை திறக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையைத் திறக்க விடாமல் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் கடையை திறக்காமல் அதிகாரிகள் சென்று விட்டனர்.
அதேபோல, கிருஷ்ணாபுரம் காலனியில் உள்ள நெசவாளர் காலனி பகுதியில் வீடுகள் உள்ள பகுதியில் அரசு மதுக் கடை திறக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குழம்பிய விற்பனையாளர்கள்:
புதிய மதுக் கடைகளுக்கு ரூ. 3 லட்சம் அளவுக்கு ஸ்டாக் அனுப்பப்பட்டது. ஆனால், எந்த பிராண்ட் அதிகம் விற்கும் எனபது தெரியாததால் அனைத்து பிராண்ட்களும், அனைத்து வகை மதுபானங்களும் கலந்து அனுப்பப்பட்டன.
இதனால், குடிமகன்கள் கேட்ட சரக்கு கிடைக்கவில்லை. இதனால் ஆங்காங்கே சண்டையும் நடந்தது.
மேலும் விற்பனையாளர்களும், மேற்பார்வையாளர்களும் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால், குடிமகன்கள் கேட்ட மதுவை எடுத்துக் கொடுப்பதற்குள் திணறிப் போய்விட்டனர்.
இதுதவிர கடைகளில் குளிர்சாதனபெட்டி இல்லாத காரணத்தால் பீர் விற்பனை படு மோசமாக இருந்தது. பீரை விற்பனையாளர்கள் சுடச் சுட எடுத்துக் கொடுக்க குடிமகன்கள் திட்டித் தீர்த்தனர்.
பெரும்பாலான கடைகளில் பார் வசதி இல்லை. இதனால் வாங்கிய மதுவை அப்படியே டீ சாப்பிடுவது போல, ரோட்டோரமாக நின்று ருசித்து, ரசித்து அருந்தினர் குடிமக்கள். இதனால் சாலையில் போன பெண்கள் முகம் சுளித்தபடி சென்றதோடு, அப் பகுதிகளில் கொஞ்சம் பதற்றமும் நிலவியது.
தனியார் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதாலும், புதிய அரசுக் கடைகள் எங்கு இருக்கிறது என்று தேடி குடிமகன்கள் அலைந்ததும் தனிக் கதை.
அரசு மது: காந்தி பேரவை உண்ணாவிரதம்
இதற்கிடையே, அரசு மதுக் கடைகளுக்கு எதிர்ப்பு தெவித்தும், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோயும் காந்தி பேரவை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கவுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை காலை இந்த உண்ணாவிரதத்தை காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைக்கிறார். மாலையில் உவமைக் கவிஞர் சுரதா முடித்து வைக்கிறார்.
பேரவைத் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications