32 ராமேஸ்வரம் மீனவர்களை கடத்தியது விடுதலைப் புலிகள்!!
கொழும்பு:
கச்சத்தீவு அருகே சனிக்கிழமை கடத்தப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கடத்திச் சென்றது விடுதலைப் புலிகள் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 600 மீனவர்கள் கடந்த சனிக்கிழமை கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதாகவும், 8 படகுகளையும் 32 மீனவர்களையும் கடத்திச் சென்றதாகவும் செய்திகள் வெளியாயின.
இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார்.
இந் நிலையில் மீனவர்களைத் தாங்கள் கடத்தவில்லை என இலங்கை கடற்படை, இந்தியக் கடற்படையிடம் தெரிவித்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மீனவர்களை விடுதலைப் புலிகளின் கடற்பிரிவான கரும்புலிகள் கடத்திச் சென்றனர் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே கடத்திச் செல்லப்பட்ட 32 மீனவர்களையும் அவர்களது 1 படகையும் விடுதலைப் புலிகள் இன்று மன்னார் பகுதியில் விடுவித்தனர். இந்தப் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.
இலங்கையில் அமைதி முயற்சியில் ஈடுபட்டுள்ள நார்வே தூதர்களின் தலையீட்டின்பேரில் தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் விடுவித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழக மீனவர்களின் 1 படகை மட்டும் விடுவித்த புலிகள் மேலும் 7 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டனர்.
நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவர் ஹாக்ரப் ஹாக்லண்ட் கூறுகையில், இந்திய மீனவர்களைப் பிடித்துச் சென்றது விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான். நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 32 மீனவர்களையும் அவர்களை விடுவித்துள்ளனர்.
மேலும் 7 படகுகளையும் விடுவிக்குமாறு கோரியுள்ளோம் என்றார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்:
இதற்கிடையே நேற்றிரவு நடந்த இன்னொரு சம்பவத்தில் தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை கடும் தாக்குதல் நடத்தியது.
கப்பலைக் கொண்டு தமிழக மீனவர்களின் படகுகள் மீது மோதினர். இதில் 13 படகுகள் சேதமடைந்தன. தனுஷ்கோடி அருகே இச் சம்பவத்தில் வலைகளையும் அறுத்தெறித்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களை கையை, காலைக் கட்டி கப்பலில் இழுத்துப் போட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications