சபரிமலையில் ஓ.பி விசேஷ அர்ச்சனை- பழனியில் மாஜி பெண் மந்திரி மொட்டை
பம்பா - பழனி:
பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்று சுவாமி ஐயப்பனை தரிசித்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்காக சிறப்பு அர்ச்சனையும் செய்தார். டான்சி வழக்கில இருந்து ஜெயலலிதா விடுதலையானதற்காக இந்த சிறப்பு அர்ச்சனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஓ.பன்னீர் செல்வம் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். போலீஸ் புடை சூழ தனது உறவினர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சபரிமலைக்கு வந்தார். பம்பையில் தங்கிய அவர் பின்னர் பெரிய பாதை வழியாக நடந்தே சன்னிதானத்தை அடைந்தார்.
18 படிகளை பய பக்தியுடன், சரண கோஷங்களை எழுப்பியவாறு கடந்த அவர் பின்னர் சுவாமி ஐயப்பனை தரிசித்தார். பன்னீர் செல்வத்திற்காக பிற பக்தர்கள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர். பன்னீர் செல்வம், அவரது உறவினர்களுடன் 18 படிகளில் ஏறினார்.
சுவாமியை தரிசித்த பன்னீர் பின்னர் பம்பை வந்து அங்குள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் ஓய்வெடுத்தார்.
இந் நிலையில் நேற்று காலை அவரது சார்பில் ஐயப்பன் சன்னிதானத்தில் நெய் அபிஷேகம் நடத்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்காக விசேஷ அர்ச்சனைகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
சபரிமலை கோவிலில் யாருடனும் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசவில்லை. சரண கோஷங்களை மட்டும் எழுப்பியவாறு பய பக்தியுடன் வழிபட்டு விட்டு அவர் திரும்பினார்.
காத்திருந்த பத்திரிக்கையாளர்களையும் அவர் சந்திக்கவில்லை.
மாஜி மந்திரி சரோஜா மொட்டை:
இதற்கிடையே முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சரோஜா சனிக்கிழமை பழனியில் மொட்டை போட்டுக் கொண்டு, இரவில் தங்கத் தேரையும் வடம் பிடித்து இழுத்துள்ளார். டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதற்காக இந்த நேர்த்திக் கடனை அவர் செலுத்தினார்.
மதுரையில் போட்டா போட்டி:
அதே போல மதுரையிலும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு இடையே நேர்த்திக் கடன் செலுத்துவதில் போட்டா போட்டி நடந்து வருகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு கோஷ்டி சிறப்பு அர்ச்சனை செய்ய, இன்னொரு கோஷ்டி தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தது. அதே போல தமிழகம் முழுவதுமே அதிமுகவினர் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் டான்சிக்காக நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications