மாறனுக்கு பதில் இன்னொருவருக்கு அமைச்சர் பதவி: கருணாநிதியுடன் வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு
சென்னை:
மறைந்த முரசொலி மாறனுக்குப் பதிலாக திமுகவைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் வாஜ்பாய் விருப்பம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசி மூலம் இது குறித்து வாஜ்பாய் பேசினார்.
இந் நிலையில் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடுவும் இன்று சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்தார். கோபாலபுரம் வீட்டில் சுமார் 20 நிமிடங்கள் நடந்த சந்திப்பின்போது மாறன் மறைவுக்கு இரங்கலையும், கருணாநிதிக்கு ஆறுதலையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
மாறனுக்குப் பதிலாக இன்னொருவரை அமைச்சராக்க முன் வர வேண்டும் எனவும் அவர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.
கருணாநிதியுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் நாயுடு பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தலைசிறந்த அமைச்சராக முரசொலி மாறன் திகழ்ந்தார்.
மாறனுக்குப் பதில் வேறு ஒருவரை அமைச்சராக்க பிரதமர் வாஜ்பாய் விருப்பம் தெரிவித்துள்ளார். அதையும் கருணாநிதியிடம் தெரிவித்தேன். கட்சியில் கலந்து பேசி முடிவைத் தெரிவிப்பதாக கருணாநிதி கூறினார். மற்றபடி நாங்கள் அரசியல் பேசவில்லை என்றார்.
நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில் கூறுகையில், மாறனுக்குப் பதில் இன்னொரு அமைச்சரை நியமிக்கலாம் என்று பிரதமர் நேற்று தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார். அதுகுறித்து கட்சியினருடன் விவாதித்து முடிவைத் தெரிவிப்பதாக கூறியுள்ளேன் என்றார்.
நேற்று முன் தினம் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, மாறனுக்குப் பதிலாக இன்னொருவரை திமுக சார்பில் அமைச்சராக்குவது குறித்து டெல்லியில் இருந்து யாரும் என்னிடம் பேசவும் இல்லை, அமைச்சராக்க நாங்களும் தயாராக இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியின் இந்தப் பேட்டியைத் தொடர்ந்தே வாஜ்பாய் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications