நாடாளுமன்ற கூட்டம்: வைகோவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி தருமா?
சென்னை:
பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா மீது திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கவுள்ளது.
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆதரவாக வாக்களிக்குமாறு மதிமுகவுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அக் கட்சியின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அவர் கடிதமும் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, இந்த விவாதத்தில் பங்கேற்று வாக்களிக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரி வைகோ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை 15ம் தேதிக்கு (திங்கள்கிழமைக்கு) சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதே கோரிக்கையை முன் வைத்து பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதால் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் அவசரம் கருதி, விடுமுறை தினமாக இருந்தாலும், அதை இன்றே (சனிக்கிழமை) விசாரிக்க தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை நீதிபதி குலசேகரன் முன்னிலையில், வைகோவின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி பொடா மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற வாய்ப்பில்லை. எனவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இதற்கு வைகோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்துரு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வைகோவின் மனுவுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரசுத் தரப்பில் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
தொடர்ந்து நீதிபதி கூறுகையில், இடையில் அவசியம் ஏற்பட்டாலோ, நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்தாலோ அதை இரு தரப்பினரும் உடனடியாக எனக்குத் தெரிவிக்கலாம். மேலும் திங்கள்கிழமையும் இந்த மனுவை நானே விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் இரு தரப்பினரும் கோரிக்கை வைக்கலாம் என்றார்.
அப்போது பேசிய வைகோவின் வழக்கறிஞர், திங்கள்கிழமை நீதிமன்றம் கூடியதும் முதல் வேலையாக இந்த மனு விசாரிக்க வேண்டும் என்றார். இதை ஏற்பதாக நீதிபதி குலசேகரன் கூறினார்.
இந் நிலையில் அமைச்சர் சுஷ்மா சுவாராஜின் கடிதத்தின்படி திங்கள்கிழமை பொடா குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடப்பது உறுதியாகிவிட்டது.
இதையடுத்து உடனடியாக இந்தக் கடித நகலை வைகோவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு, நீதிபதி குலசேகரனுக்குத் தகவல் தருவார் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை விவாதம் தொடங்குவதால், நாளை தமிழக அரசின் பதில் மனுவைப் பெற்றுக் கொண்டு நாளையே இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வைகோ டெல்லி செல்ல முடியுமா இல்லையா என்பது நாளை தெரிந்துவிடும்.
மதிமுகவினர் மீது தடியடி:
முன்னதாக பொடா நீதிமன்றம் வைகோவின் கோரிக்கையை நிராகரித்த பின்னர் நீதிமன்றத்தின் வெளியே மதிமுகவினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்படவே போலீசார் மதிமுக தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் தமிழரசு என்ற தொண்டரை கைது செய்து பொடா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவருக்கு நீதிமன்றம் உடனடியாக ஜாமீன் வழங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications