கோபால் விடுதலைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி:
நக்கீரன் கோபால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்யுமாறு கோரிய தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார். நேற்று காலை அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதா அரசின்கொடுங்கோலாட்சிக்குக் கிடைத்துள்ள முதல் அடியே தனது விடுதலை என்று அவர் கூறினார். பின்னர் திமுகதலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிலையில் கோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் சார்பில் அவசர அவசரமாக நேற்று மாலை உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி வி.என்.காரே, நீதிபதிகள் லோஹத்தே, பிரஜேஷ் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு மனுவை அனுப்பினார்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் கோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.
நெடுமாறன் ஜாமீன் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்ததும், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததோடு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications