2 அமைச்சர்களுக்கு ஜெ. கல்தா: தொண்டர்களின் புகார் எதிரொலி
சென்னை:
தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ப.மோகன் ஆகிய இருவரும் திடீரென்று டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
தமிழக அமைச்சரவையில் சில மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சர்கள் நீக்கமும், சேர்ப்பும் நடந்து வருகிறது. அமைச்சர் பதவியிலிருந்து வ.து.நடராஜன் ஓரிரு மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். இந் நிலையில் தற்போது 2 அமைச்சர்களின் பதவி பறிபோயுள்ளது.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து வந்த எம்.சி.சம்பத், உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சராக இருந்த ப.மோகன் ஆகியோரது பதவிகள் தற்போது பறிக்கப்பட்டுள்ளன.
இருவரையும் டிஸ்மிஸ் செய்து முதல்வர் ஜெயலலிதா விடுத்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். மோகன் வசம் இருந்த துறைகள் அமைச்சர் பொன்னையனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, சம்பத் வைத்திருந்த துறைகள் செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அன்பழகனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மோகன் வசம் இருந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பதவி கொளப்பாக்கத்தில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் நேர்காணலின்போது பறிக்கப்பட்டது. அதற்கடுத்த சில மணி நேரங்களில் அமைச்சர் பதவியும் பறிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோகன் மற்றும் சம்பத்தின் பதவி பறிபோயுள்ளதற்கு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டிப் பூசலே காரணம் என கூறப்படுகிறது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஜெயலலிதா நடத்திய நேர்காணலின்போது இரு அமைச்சர்கள் மீதும் ஏகப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்தே இந்த அதிரடி மாற்றம் என கூறப்படுகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதுவரை 14 முறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
அப்போது ஜெயலலிதாவுடன் 5 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். அதற்கு அடுத்த சில நாட்களில் மேலும் 19 பேர் சேர்ந்தனர். அதன் பின்னர் 22வது நாளில் தஞ்சாவூர் அய்யாறு வாண்டையார் பதவிநீக்கம் செய்ப்பட்டார்.
அதற்குப் பிறகு இதுவரை மொத்தம் 14 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 24 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர்களாகியுள்ளனர். தற்போதைய அமைச்சரவையின் பலம் 24 ஆகும்.