ஸ்பிக் ஊழலுக்கு ஜெயலலிதா தான் முழுக் காரணம்: சிபிஐ
சென்னை:
அரசின் பங்குகளை ஸ்பிக் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்று, அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்குமுதல்வர் ஜெயலலிதா முழுக்க, முழுக்கக் காரணம் என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் மத்தியப் புலனாய்வுப் பிரிவான, சிபிஐ இன்று ஒருமனு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1992ம் ஆண்டில் அரசிடம் இருந்த ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகளை அந்த நிறுவனத்துக்கே மிகக் குறைந்தவிலைக்கு திருப்பித் தர தமிழக அரசு எடுத்த முடிவுக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தான் முழுக்க,முழுக்கக் காரணம். இந்த முடிவை வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பே இல்லை.
ஜெயலலிதாவின் இந்தச் செயலால் ஸ்பிக் நிறுவன அதிபர் ஏ.சி.முத்தையா செட்டியாருக்கு கொள்ளை லாபம்கிடைத்தது. இதனால் அரசு நிறுவனமான டிட்கோவுக்கு ரூ. 28.29 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இதில் பெரும் முறைகேடும், ஊழலும் நடந்துள்ளது. ஜெயலலிதாவும் அப்போதைய டிட்கோ தலைவர்ராமச்சந்திரனம் சேர்ந்து தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஸ்பிக் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கச்செய்வதற்காக அரசின் பங்குகளை மிகக் குறைந்த விலைக்கு அவர்களிடம் விற்றுள்ளனர்.
இதன்மூலம் ஏ.சி.முத்தையா செட்டியாரின் தந்தையான மறைந்த எம்.ஏ.சிதம்பரம் செட்டியாருக்கு ஸ்பிக் நிறுவனதலைவர் பதவி கிடைக்கச் செய்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட சதியாகும் என்று சிபிஐ கூறியுள்ளது.