மேலும் ஒரு ஆசிரியரின் டிஸ்மிஸ் உத்தரவுக்கு தடை விதித்தது நீதிமன்றம்
சென்னை:
3 நீதிபதிகள் குழுவால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியர் தொடர்ந்து வழக்கில், அவரது டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைத்துசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஸ்மிசுக்கு எதிராக நேற்று முன் தினமும் ஒரு ஆசிரியர் நீதிமன்றத்தில் தடைவாங்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட்ஆன ஊழியர்களின் வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி 3 நீதிபதி குழு நியமிக்கப்பட்டது.
இக் குழுவினர் சுமார் 6,000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இவர்களில் 999 பேரை டிஸ்மிஸ்செய்தனர். இதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் விஜயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தான் அரசுப் பள்ளி ஆசிரியர் அல்ல என்றும், அரசின் உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருவதாகவும்,இதனால் தனக்கு டெஸ்மா சட்டம் பொருந்தாது என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன், விஜயராஜின் டிஸ்மிஸ் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சம்பாளையம் சி.எஸ்.ஐ. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பாலசுந்தரமும்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தானும் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் என்பதால் தனக்கும் தனக்குடெஸ்மா சட்டம் பொருந்தாது என்றும் கூறியிருந்தார்.
அவரது மனுவையும் விசாரணைக்கு ஏற்ற, நீதிபதி ரவிராஜ பாண்டியன் டிஸ்மிஸ் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துஉத்தரவிட்டார்.
இதற்கிடையே டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்களில் 9 பேர் நேற்று சென்னையில் உள்ள மாநில தீர்ப்பாயத்தில்(டிரிபியூனல்) மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். தங்களது டிஸ்மிஸ் உத்தரவுகளை ரத்து செய்யுமாறு அவர்கள்மனுவில் கோரியுளளனர்.