எஸ்மா வழக்கை தள்ளுபடி செய்ய கருணாநிதி மனு
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்திருக்கும் எஸ்மா வழக்கை தள்ளுபடி செய்யுமாறு திமுக தலைவர் கருணாநிதி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்யத் தூண்டியதாக கருணாநிதி, காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் ஆகியோர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் கருணாநிதி மீதான வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரசு ஊழியர்கள் அவர்களது பிரச்சனைக்காக வேலை நிறுத்தம் செய்தனர். அதை நான் தூண்டி விடவில்லை. அரசியல் உள்நோக்கத்திற்காக என்மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
தற்போது அரசு ஊழியர்கள் அனைவரும் வேலைக்குச் சேர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை நடப்பது சரியல்ல. எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதை விசாரித்த நீதிபதி ரோசய்யா வழக்கை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications