ஜெ. கன்னடத்துக்காரரா?: வாசனுக்கு பாஜக கண்டனம்
சென்னை & கோவை:
முதல்வர் ஜெயலலிதாவை கன்னட மாநிலத்துக்காரர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறியுள்ளது கண்டனத்துக்குரியது என்று தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தமிழிசை கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியாதவது:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்றால், ஜெயலலிதா கன்னட மாநிலத்தவர் என்று வாசன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. துணைப் பிரதமர் அத்வானியின் ரதயாத்திரை குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், இது ரத யாத்திரை அல்ல ரத்த யாத்திரை என்று கூறியிருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
பிரச்சனை ஏற்படாது: இல.கணேசன்
இந் நிலையில் கோவையில் அத்வானி பேசவிருக்கும் வ.உ.சி மைதானத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன்,
அத்வானியின் ரதயாத்திரையால் வகுப்புக் கலவரம் ஏற்படாது. அத்வானியின் பிரச்சாரத்தை நினைத்து எதிர்க் கட்சிகளின் வயிற்றுக்குள் தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. எல்லா தலைவர்களையும் போலத்தான் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார். திட்டமிட்டபடி அவர் கோவை வருவார்.
கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதை நாளை கட்சித் தலைவர் வெங்கைய்யா நாயுடு அறிவிப்பார். ஆலடி அருணாவைப் போல் திமுக கட்சியில் அதிருப்தியுடன் இருக்கும் பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.