ஜெயலலிதாவுக்கு நாகரீகம் தெரியாது: அய்யர்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர அய்யர் இன்று சந்தித்துப் பேசினார்.
மயிலாடுதுறையில் மணிசங்கர அய்யர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார். அவரை ஆள் வைத்துத் தாக்கிய ஓ.எஸ்.மணியன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இன்று காலை அய்யர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது மணியத்தின் ஆள்பலத்தை சமாளிப்பது குறித்து பேசியதாகத் தெரிகிறது. அப்போது அய்யருக்கு திமுக தொண்டர்களின் முழு உதவியும் தரப்படும்என கருணாநிதி உறுதியளித்தார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அய்யர், மரியாதை நிமித்தம் கருணாநிதியை சந்தித்தேன். அவரது வாழ்த்தைப்பெற்றேன். இனி புத்துணர்வோடும், புதுத் தெம்போடும் பிரசாரத்தைத் தொடங்கப் போகிறேன். கூட்டணியில் உள்ள பிறகட்சிகளின் தலைவர்களையும் சந்திப்பேன்.
சோனியா காந்தி குறித்து முதல்வர் ஜெயலலிதா மிக அநாகரீகமாக பேசி வருகிறார். சோனியா பற்றி பேசக் கூட ஜெயலலிதாவுக்குதகுதி கிடையாது. மேடை நாகரீகம் கூடத் தெரியாதவர் ஜெயலலிதா. தோல்வி பயத்தால் மன உளைச்சலில் இருக்கும் ஜெயலலிதாஎன்ன வேண்டுமானாலும் பேசுவார் என்றார்.
முன்னதாக கருணாநிதியை வணிகர்கள் சங்கத்தினர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.