முகமூடிக் கொள்ளை: திமுக செயலாளர், காவலாளி கொலை; 300 பவுன் நகை திருட்டு
சென்னை:
சென்னை அருகே வேலப்பன் சாவடி பகுதியில் முகமூடிக் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் திருவேற்காடுநகர திமுக செயலாளர், அவரது வீட்டுக் காவலாளி உள்பட 2 பேர் இறந்தனர். வீட்டில் இருந்த 300 பவுன்நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை அருகே திருவேற்காடு பகுதியில் உள்ளது வேலப்பன் சாவடி. இங்கு வசித்து வந்தவர் கஜேந்திரன் (49).இவர் அந் நகர திமுக செயலாளர். இவரது வீட்டிற்கு நேற்று நள்ளிரவுக்கு மேல் இரண்டு டாடா சுமோ கார்களில்முகமூடி அணிந்த 10 பேர் வந்திறங்கியுள்ளனர்.
வீட்டின் வெளியே இருந்த காவலாளி ஆறுமுகத்தை (69) அக்கும்பல் முதலில் வெட்டிக் கொன்றது. பின்னர் வீட்டின்கதவை அக் கும்பல் தட்டியுள்ளது. கதவைத் பாதி திறந்த கஜேந்திரன் இக் கும்பலைப் பார்த்துவிட்டு மூடமுயற்சித்துள்ளார். ஆனால், அவரைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் புகுந்தது அந்தக் கும்பல்.
பின்னர் கஜேந்திரனை அவர்கள் அரிவாள்களால் வெட்டினர். அவர் கதறித் துடிக்கவே அவரது மனைவி பொம்மி(45), மகள் கவிதா (21) ஆகியோர் அலறியடித்து எழுந்துள்ளனர். அவர்களையும் அக் கும்பல் வெட்டஆரம்பித்தது.
இதில் கஜேந்திரன் படுகாயமடைந்து மயங்கி சரிந்தார். அவரது மனைவி, மகளும் படுகாயமடைந்தனர்.மூவரையும் ஒரு அறையில் தள்ளி சாத்திய அக் கும்பல் வீட்டிலிருந்த 300 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றது.
அப்போது மாடியில் இருந்த கஜேந்திரனின் மகன் பிரபு (18), கீழே வந்தால் வெட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில்செல்போன் மூலமாக நண்பர்களின் உதவியைக் கோரியுள்ளார். அவர்கள் வந்து சேருவதற்குள் முகமூடிக் கும்பல்நகைகளுடன் கார்களில் தப்பியோடிவிட்டது.
கஜேந்திரன் வீட்டின் அலறல் சத்தம்கேட்டு அப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஓடி வந்துள்ளனர். ஆனால்,அவர்களையும் அரிவாள்களைக் காட்டி மிரட்டிவிட்டு அக் கும்பல் தப்பியுள்ளது.
இதையடுத்து அப் பகுதி மக்கள் காவலாளியின் உடலை மீட்டனர். பின்னர் வீட்டில் படுகாயங்களுடன் மயங்கிக்கிடந்த கஜேந்திரன் மற்றும் மனைவி, மகளையும் அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கஜேந்திரன் இன்று காலை இறந்தார். அவரது மனைவியும், மகளும்தொடர்ந்து சிகிசசை பெற்று வருகின்றனர். இதில் பொம்மியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக்கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, வட சென்னை வேட்பாளர் குப்புசாமி, நெப்போலியன்எம்.எல்.ஏ உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மருத்துவமனைக்கு வந்தனர்.
கோடை காலத்தில் சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் முகமூடிக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகம்நடப்பது வழக்கம். தற்போதும் இதுபோல முகமூடிக் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள்குறிப்பாக புறநகர்ப் பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.