ரஜினியின் ஆதரவை பா.ஜ.க. கோரும்: சுகுமாறன் நம்பியார்
சென்னை:
ரஜினிகாந்த் ஒரு தேசியவாதி. இதனால் எங்கள் கட்சிக்கு அவரது ஆதரவைக் கோருவோம் என பா.ஜ.க. வட சென்னைவேட்பாளரும், வில்லன் நடிகர் நம்பியாரின் மகனுமான சுகுமாறன் நம்பியார் கூறியுள்ளார்.
வட சென்னையில் உள்ள சுமார் 1.5 லட்சம் மலையாளிகளின் ஓட்டுக்களை மனதில் வைத்து இந்தத் தொகுதியில் அவர்போட்டியிடுகிறார்.
இந் நிலையில் நிருபர்களை சந்தித்த சுகுமாறன் கூறுகையில்,
தனிப்பட்ட முறையில் எனக்கு ரஜினியைத் தெரியும் என்ற முறையில் சொல்கிறேன். அவர் வெளிப்படையாக யாரையும் ஆதரிக்கமாட்டார். அதே நேரத்தில் பிரதமர் வாஜ்பாய் மீதும், துணைப் பிரதமர் மீதும் ரஜினி பெரும் மரியாதை வைத்திருப்பது எனக்குத்தெரியும்.
மக்களிடம் பெரும் செல்வாக்கு கொண்ட ரஜினியின் ஆதரவை எல்லா கட்சிகளும் நாடுவது இயற்கை தான். ஆனால்,தேசியவாதியான அவர் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம். அவரை நேரில் சந்தித்தும் கோரிக்கைவைப்பேன்.
பா.ஜ.கவுக்கு ரஜினி வெளிப்படையாக ஆதரவு தராவிட்டாலும் அவரது ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்றார்சுகுமாறன்.
நம்பியாரின் நெருங்கிய நண்பர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மூலமாகவும் ரஜினியின் ஆதரவைபா.ஜ.கவுக்குப் பெற முயற்சி நடக்கிறது.
அதே நேரத்தில் ரஜினியின் கர்நாடக நண்பரான நடிகர் அம்பரீஷ் மூலமும், ஆந்திர நண்பரான நடிகர் மோகன்பாபு மூலமும்அவரை காங்கிரசுக்கு ஆதரவாக பேச வைக்க டெல்லி வட்டாரங்கள் முயன்று வருகின்றன.
அம்பரீஷ் காங்கிரஸ் எம்.பியாக உள்ளார். மோகன்பாபு தீவிரமான காங்கிரஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.