இன்னும் "உயிருடன்" உள்ள த.மா.கா!
டெல்லி:
மூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் உள்ளது.
அதே நேரத்தில், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகாரம் வழங்கப்படாத கட்சி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அதிமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதை கண்டித்துகட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
திமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
பின்னர் காலப்போக்கில் தமாகவுக்கும், திமுகவுக்கும் விரிசல் ஏற்பட்டது. அதிமுகவுடன் போய்ச் சேர்ந்தார் மூப்பனார். அதைக்கண்டித்து ப.சிதம்பரம் வெளியேறி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார்.
மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தமாகாவை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அவரது மகன் வாசன். த.மா.காவை கலைத்துவிட்டதாகவும் அறிவித்தார்.
இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் தமாகா தொடர்ந்து உள்ளது. இருப்பினும் இக்கட்சிக்குஅங்கீகாரம் வழங்கப்படாத கட்சி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சமீபத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைந்த சமதா கட்சியும் (ஜார்ஜ் பெர்னாண்டஸின் கட்சி) பதிவுசெய்யப்பட்ட அங்கீகக்கப்படாத கட்சியாக தேர்தல் ஆணைய பட்டியலில் உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தியில் உள்ள வாசனின் தீவிர ஆதரவாளர்கள் சிலர், அவரை மீண்டும் த.மா.காவுக்குஉயிர் கொடுக்கும்படி நச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.