எதிர்ப்பவர்கள் எதிர்த்தாலும் எனது பயணம் தொடரும்- ராமதாஸ்
வேலூர்:
காலில் குத்தும் முள்ளை அகற்றிவிட்டு எனது பயணம் தொடரும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வேலூரில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்காக நான் பாடுபட்டு வருகிறேன். அவர்கள் சமூகரீதியிலும் பொருளாதாரரீதியிலும் முன்னுக்கு வர வேண்டும். இது தான் என் நோக்கம்.
அதிலிருந்து என்னை வேறு எங்கோ தள்ளிக் கொண்டு போக முயற்சி நடக்கிறது. நான் பயணிக்கும் சமூக முன்னேற்றப் பாதை கரடுமுரடானது. இதில் முள் குத்தும். குத்திய முள்ளை அகற்றிவிட்டுத் தான் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன்.
என் பயணத்தை ஆதரிப்பவர்கள் ஆதரிப்பார்கள், எதிர்ப்பவர்கள் எதிக்கலாம். அதை சந்திப்பேன் என்றார் ராமதாஸ்.
இதையடுத்து ரஜினிக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, இப்போது நான் சொன்னேனே அது தான் என் பதில் என்ற ராமதாஸ் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டார். மேற்கொண்டு கேள்விகளை அவர் எதிர்கொள்ளவில்லை.