நாளை திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம்
நெல்லை:
திருநெல்வேலியின் மிக பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம்நாளை காலை நடைபெறுகிறது.
நெல்லையப்பர் கோயில் அகத்தியரின் வரலாற்று நூலிலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அளவுக்கு பழமைவாய்ந்த புராதனக் கோவில் இது. 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக் கோவிலின் கும்பாபிஷேகம் 1974ம்ஆண்டில் நடந்தது.
சுமார் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது தான் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ. 4.5 கோடி செலவில் கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்துசேரன்மகா தேவி, அம்பை, தென்காசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகியபகுதிகளில் இருந்து 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக 4 தற்காலிக பேருந்து நிலையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
கும்பபாபிஷேக நிகழ்ச்சிகளை அகில இந்திய வானொலி நிலையம் நேரடி வர்ணணை செய்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விடுமுறை விடப்பட்டு உள்ளது. நெல்லைமாநகரில் மதுக்கடைகளை நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு நெல்லை பொருட்காட்சி திடலில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. மாநகராட்சி மற்றும் மாவட்டநிர்வாகம் சார்பில் கழிப்பறை வசதிகள், குடிதண்ணீர் வசதிகள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சி சங்கராச்சாரியார் வருகை:
கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந்திரர் ஆகியோர் நேற்று நெல்லைவந்தனர். நேற்று கோவிலில் நடந்த யாகசாலை பூஜையிலும் கலந்துகொண்டனர்.
இன்று மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், திருப்பனந்தாள்,திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஆகியோர்நெல்லை வந்துள்ளனர்.