அதிமுக மீதான புகார்கள் எதிரொலி: சென்னை தொகுதிகளுக்கு 9 சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்
சென்னை:
தேர்தலின்போது சென்னையில் ஆளும் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபடலாம் என்று எதிர்க் கட்சிகள் தந்த புகாரையடுத்துநகரில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தலா 3 சிறப்புப் பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
ஏற்கனவே, மாநில அளவில் சிறப்பு தேர்தல் பார்வையாளராக வி.கே.பாசு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் ஆகியோரை எப்படியாவது தோற்கடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவினர் முறைகேட்டில் இறங்கலாம் என தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் பறந்தன. கடந்தகாலத் தேர்தல்களின்போது நடந்த வன்முறைகளும் சுட்டிக் காட்டப்பட்டன.
இதையடுத்து வட சென்னைக்கு ஆஷிஷ் உபாத்யாயா, சஞ்சய் குமார், அனில் குமார் உபாத்யாயா ஆகியோரை சிறப்புப்பார்வையாளர்களாக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
அதே பேல மத்திய சென்னைக்கு ராஜீவ் ஸ்வரூப், மஜீத் அலி, மோரா பூபால் ரெட்டி ஆகியோர் சிறப்புப் பார்வையாளர்களாகஇருப்பார்கள் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
எஸ்.வி.ஆர். சீனிவாஸ், ஆச்சாரியா, சுகுமார் தாஸ் ஆகியோர் தென் சென்னை தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 9 பேரும் சேப்பாக்கம் விருந்தினர் விடுதியில் தங்கியிருப்பார்கள்.
இவர்களது அறைகளுக்கு முன் புகார் பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
3 தொகுதிகளில் எந்தக் கட்சியினர் தவறு செய்தாலும் அது தொடர்பான புகார்களை இவர்களை நேரில் சந்தித்தோ அல்லது புகார்பெட்டி மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.