புதுக்கோட்டை அருகே ஜாதி மோதல்: வீடுகள் சூறை, ஆயுத போலீஸ் குவிப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையருகே திரையரங்கில் ஏற்பட்ட மோதல் பெரும் ஜாதிக் கலவரமாக வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன. போலீஸ் வாகனங்களும் உடைக்கப்பட்டன.
அப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையையடுத்த கீரனூர் கள்ளர் தெருவைச் சேர்ந்த வீரப்பன் என்பவருக்கும் அதே ஊரின் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் நேற்றிரவு தியேட்டருக்குள் எச்சில் துப்பும் விஷயத்தில் மோதல் ஏற்பட்டது.
இருவரும் அடித்துக் கொண்டனர். அப்போது முருகேசனுடன் வந்தவர்கள் வீரப்பனைத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்தார் வீரப்பன். முருகேசனும் வீரப்பனும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள்.
காயமடைந்த வீரப்பன், உடனடியாக தனது ஜாதியினரிடம் சென்று தாக்கப்பட்டதைக் கூறினார். இதையடுத்து அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு 2 வேன்களில் ஆயுதங்களுடன் நள்ளிரவில் காந்தி நகருக்குள் சென்றனர்.
அப் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கினர். வீடுகளுக்குள் நுழைந்தும் பொருட்களை சூறையாடினர். நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன.
பல டிவிக்கள் உடைத்து எரியப்பட்டன. பீரோக்கள் உடைக்கப்பட்டன. சுமார் அரை மணி நேரம் அவர் வெறித்தனமாக தாக்கினர். தங்களது அடையாளம் தெரியக் கூடாது எனபதற்காக முகத்தில் ஹோலி கலர் பொடிகளை தடவிக் கொண்டு வந்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
நிராயுதபாணியாக தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது அரிவாள், உருட்டுக் கட்டைகளுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் வீடுகளை விட்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஓடினர்.
சுமார் அரை மணி நேரம் வெறித் தாக்குதல் நடத்திவிட்டு அக் கும்பல் தப்பியோடிவிட்டது.
இதையடுத்து தங்களைத் தாக்கியவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காந்தி நகர் பகுதி மக்கள் புதுக்கோட்டை சாலையில் திரண்டு நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஜாதிக் கலவரம் வெடிக்கும் சூழல் இருப்பதாக தெரியவந்ததால் ஆயுதப் படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
சாலை மறியலை கைவிடக் கோரி போலீசார் வற்புறுத்த, காந்தி நகர் பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். தாக்கியவர்களைக் கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என அவர் கூறியதால் பதற்றம் அதிகரித்தது.
இந் நிலையில் போலீசார் மீது சிலர் கல்வீசினர். அடுத்து போலீஸ் வேன்கள் மீதும் கல்வீச்சு நடந்தது. சிலர் அந்த வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதையடுத்து காந்தி நகர் பகுதியினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி தந்ததையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாக்குதலில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஆயுதப் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.