ஜெ. பாதுகாப்புக்கு வந்து தூக்கம் போட்ட 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்
மதுரை:
முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஏட்டையாக்கள் பணி நேரத்தில் தூங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடந்த 19ம் தேதி மதுரையில் தமுக்கம் மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதா பொதுக் கூட்டத்தில் பேசினார். பின்னர் பாண்டியன் ஹோட்டலில் தங்கிவிட்டு காலையில் ராமநாதபுரம் புறப்பட்டார்.
பாண்டியன் ஹோட்டலில் ஜெயலலிதா தங்க இருந்ததையடுத்து 17ம் தேதி முதலே ஹோட்டலை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். ஹோட்டலின் எல்லா பகுதிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
மதுரை சட்டம்-ஒழுங்கு போலீசார் தவிர, ஆயுதப் படை போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந் நிலையில் 18ம் தேதி பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட மதுரை போலீஸ் துணை கமிஷ்னர் சுந்தரேசன் பாண்டியன் ஹோட்டலுக்குச் சென்றார். அப்போது ஏட்டையா பாபு, முருகேன் ஆகியோர் ஹோட்டல் மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
ஹோட்டலில் இருந்து இரு தலையணைகளையும் எடுத்து வந்து மரத்தடியில் ஹாயாக துயில் கொண்டிருந்தனர்.
இதையடுத்து இந்த இருவரையும் சஸ்பெண்ட் செய்ய கமிஷ்னர் விஜய்குமாரிடம் சுந்தரேசன் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து இரு ஏட்டுகளும் இப்போது சஸ்பெணட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மதுரை போலீசார் மத்தியில் எரிச்சல் பரவியுள்ளது. 19ம் தேதி தான் முதல்வரே வந்தார். அதற்காக 17ம் தேதி காலையில் இருந்தே ஹோட்டலில் இரவும், பகலுமாக நிறுத்தி எங்களை அதிகாரிகள் நாஸ்தி செய்துவிட்டனர்.
இதில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட ஏட்டு பாபுவும், நெஞ்சு வலி பிரச்சனை இருக்கும் முருகேசனும் உடல் சோர்வு காரணமாக கொஞ்சம் தூங்கிவிட்டனர். இதற்காக சஸ்பெண்ட் செய்திருப்பதை ஏற்க முடியவில்லை என்கின்றனர் காக்கிகள்.
சஸ்பெண்ட் ஆன இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications