புதிய வீராணம் திட்டம்: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு- போர்வெல் அமைக்கும் பணிகள் நிறுத்தம்
கடலூர்:
ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை எதிர்த்து மக்கள் இன்று சாலைமறியலில் ஈடுபட்டதால் போர்வெல்களைத் தோண்டும் பணிகளை அதிகாரிகள் பாதியிலேயே கைவிட்டனர்.
புதிய வீராணம் திட்டத்தின் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாசட்டசபையில் அறிவித்தார்.
ஆனால் வீராணம் ஏரி வறண்டு கிடக்கிறது. தேர்தலுக்குள் எப்படியாவது சென்னைக்குத் தண்ணீர் கொண்டுசென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ரூ.50 கோடி செலவில் வீராணம் ஏரியிலும் சுற்றியுள்ள 45இடங்களிலும் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி அந்தத் தண்ணீரை பம்ப் செய்து சென்னைக்குக் காண்டு செல்லமுடிவு செய்யப்பட்டது.
ஆனால், அவ்வாறு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினால் வீராணம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும் என்பதால், அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று வடகுத்து கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு அதிகாரிகள் முயன்றனர். அதை எதிர்த்துஅக்கிராம மக்கள், பஞ்சாயத்துத் தலைவர் ஜெகன் தலைமையில் சென்னை - கும்பகோணம் சாலையில் மறியலில்ஈடுபட்டனர்.
வீராணம் திட்டத்துக்காக சாலையோரங்களில் போடப்பட்டிருக்கும் ராட்சச சிமெண்ட் குழாய்களை சாலையின்குறுக்கே போட்டு மறியல் செய்தனர். இதனால் சென்னை-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து அடியோடுபாதிக்கப்பட்டது.
மறியல் செய்தவர்களை போலீசார் மிரட்டிப் பார்த்தனர். ஆனால், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. தேர்தல்நேரத்தில் தடியடி, துப்பாக்கிச் சூடு ஏதும் நடத்தினால் பிரச்சனையாகிவிடும் என்பதால் சமாதானம் பேசும்படிகாவல்துறையினருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது.
இதையடுத்து நெய்வேலி டி.எஸ்.பி. பெருமாள் விரைந்து வந்து கிராம மக்களுடன் சமாதானம் பேசினார்.அப்போது, போர்வெல் போடுவதை நிறுத்தினால்தான் பேச்சு நடத்துவோம் என மக்கள கூறிவிட்டனர்.இதையடுத்து பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டப்படும் வரை ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும் பணி நிறுத்திவைக்கப்படும் என்று டி.எஸ்.பி. உறுதி அளித்தார்.
இதனையடுத்தே கிராம மக்கள் சாலை மறியலை வாபஸ் பெற்றனர். போர்வெல்கள் தோண்டுவதற்காக வந்தஅதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது பணிகளை பாதியிலேயே விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர்.
3 கிராமங்களில் இதற்கு முன்னர் இதேபோல் எதிர்ப்பு கிளம்பியதால் ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணிபாதியிலேயே கைவிடப்பட்டது. இதுவரை 12 போர்வெல்கள் தோண்டப்பட்டு உள்ளன. இவற்றில் பாதி, பொதுமக்கள் எதிர்ப்பால் பாதி தோண்டியதோடு நிறுத்தப்பட்டுவிட்டன.
புதிய வீராணம் திட்டமே சாத்தியமில்லாத ஒன்று என பல்வேறு நிபுணர்களும் கருத்துத் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. கோடிக்கணக்கில் கமிஷன் அடிக்கவே இந்த புதிய வீராணம் திட்டத்தை அதிமுக அரசுஅமலாக்கி வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications