ஜெயலலிதாவுக்கு கணக்குத் தீர்க்கும் நாள்: வைகோ
அரக்கோணம்:
ஜெயலலிதா அரசுக்கு கணக்குத் தீர்க்கும் நாள் தான் இந்த மக்களவைத் தேர்தல் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
அரக்கோணத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இங்கே திரண்டிருக்கும் கூட்டம் ஜெயலலிதாவைப் போல பிரியாணி கொடுத்து திரட்டப்பட்டதல்ல, தானாகவே வந்திருக்கும் கூட்டம்.
கடந்த ஓராண்டாய் போலீஸ் வேனில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வழக்குக்காக அலைந்தேன். இப்போது பிரச்சாரத்துக்காக மக்களைச் சந்திக்க இதுவரை 28,000 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கிறேன்.
மக்களை நான் சந்திக்கக் கூடாது, பேசக் கூடாது என்று தான் ஜெயலலிதா என்னை சிறையில் போட்டார். இன்று ஒவ்வொரு கூட்டத்திலும் லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தியாவிலேயே முழு வெற்றி பெறும் அணியாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இருக்கப் போகிறது. 40க்கு 40தையும் வெல்லப் போகிறோம்.
வரும் 10ம் தேதி ஜெயலலிதாவின் மமதை பொடிப் பொடியாகும். நான் 28 முறை சிறை சென்றுள்ளேன்.
நகையைத் திருடிவிட்டோ, அல்லது ஜெயலலிதாவைப் போல ஊர் சொத்தை கொள்ளை அடித்து, ஊழல் செய்து சிறைக்குப் போகவில்லை. கற்புக்கரசி கண்ணகியின் கண் பார்வை தன் மீது பட்டுவிடுமோ என்று பயந்து தான் அந்தச் சிலையை அகற்றினார் ஜெயலலிதா.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தவுடன் கல்லூரி மாணவிகளின் பஸ்களை எரித்தனர் அதிமுகவினர். அதற்கு இந்தத் தேர்தலில் மக்கள் பழிவாங்குவார்கள்.
ஜெயலலிதாவுக்கு கணக்கு தீர்க்கும் நாள் தான் இந்தத் தேர்தல் என்றார் வைகோ.