பொடா வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வைகோ மனு
சென்னை:
தன் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 8ம் தேதி நீதிபதி சஹார்யா தலைமையிலான பொடா மறு ஆய்வுக் குழு, வைகோ மீது பொடா சட்டத்தின் கீழ்வழக்கு தொடர எந்த வித முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு கூறியது. மேலும் வைகோ மீதான வழக்கை திரும்பப்பெற அரசு வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், தமிழக அரசு வழக்கை திரும்பப் பெறாமல் உள்ளது.
இதையடுத்து பொடா வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வைகோ பொடாசிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை எதிர்த்து அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரை மத்திய,மாநில அரசுகளைத் தான் கட்டுப்படுத்துமே தவிர பொடா வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தைக்கட்டுப்படுத்தாது, இதனால், வைகோவின் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அரசுத் தரப்பின் வாத்தை ஏற்றுக் கொண்ட பொடா நீதிமன்ற நீதிபதி, வைகோவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், என் மீதான பொடாவழக்கை மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி வாபஸ் பெற தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
நான் தாக்கல் செய்துள்ள இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, பொடா வழக்கு விசாரணையை நிறுத்திவைக்குமாறு பொடா நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.