ஜெயாவை அடக்க டி.ஆர்.பாலு தான் சரியான ஆள்: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவை அடக்க சரியான ஆள் டி.ஆர். பாலு தான், எனவே அவரை 3 லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தென் சென்னை திமுக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலுவுக்கு ஆதரவாக திருவல்லிக்கேணி பகுதியில் பிரச்சாரம் செய்தார் வைகோ.

வைகோ கூறியதாவது:

கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என வானிலை எப்படி இருந்தாலும் எங்களது கூட்டணித் தலைவர்களின் கூட்டங்களுக்கு மக்கள் ஏராளமாய் திரண்டு வந்து ஆதரவு தருகின்றனர்.

இதற்குக் காரணம் ஜெயலலிதா அரசு மீது மக்களுக்கு உள்ள கோபம். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் தீர்ப்பை தமிழக மக்கள் தரப் போகிறார்கள். மதசார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதில் நாட்டுக்கே தமிழகம் வழிகாட்டப் போகிறது. நாற்பதிலும் நாங்கள் வெல்லப் போகிறோம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பழி வாங்கவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். அதிகாலையில் வீடு புகுந்து ஊழியர்களை கைது செய்தார்களே, 1.7 லட்சம் பேரை ஒரே நாளில் சஸ்பென்ட் செய்து வீட்டுக்கு அனுப்பினார்களே, அதில் 32 பேர் மனம் நொந்து இறந்தார்களே.. இதையெல்லாம் ஜெயலலிதா மறந்தாலும் அரசு ஊழியர்கள் மறக்க மாட்டார்கள்.

என்னைப் பார்த்து, இவர் தமிழக மக்களுக்காகவா சிறைக்குப் போனார், ஈழத் தமிழர்களுக்காகத் தானே சிறைக்குப் போனார் என்கிறார் ஜெயலலிதா.

நான் ஊரைக் கொள்ளையடித்துவிட்டா சிறைக்குப் போனேன்?. கொள்கைக்காகத் தானே சிறை சென்றேன். நீ கொள்ளையடித்துவிட்டல்லா சிறைக்குப் போனாய். அந்த வழக்கு கர்நாடகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்துக்களும், முஸ்லீம்களும் நெருங்கி வாழும் நாடு இந்தியா, இங்கு மதக் கலவரம் வந்தால் எல்லா தரப்புக்கும் அழிவு தான். மேலும் பல மசூதிகளை இடிப்போம் என்கிறார்கள். அப்படிச் செய்தால் எதிர் விளைவு ஏற்படாதா? ஏன் வம்பை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

தர்மபுரியில் மாணவிகளை உயிரோடு பஸ்சில் வைத்துக் கொளுத்தப்படக் காரணமாக இருந்த ஜெயலலிதா, அந்த மாணவிகளுக்காக கல்லூரியில் எழுப்பப்பட்ட நினைவு ஸ்தூபியை அகற்ற உத்தரவிட்டார். அதை மாணவிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து அதே கல்லூரியில் டாக்டர் பட்டத்தை கேட்டு வாங்கியிருக்கிறார் ஜெயலலிதா. என்ன ஒரு கேவலமான புத்தி?

ராணி மேரிக் கல்லூரியை இடிக்கத் திட்டமிட்ட ஜெயலலிதாவை அடக்கியவர் டி.ஆர். பாலு. ஜெயலலிதாவின் ஒவ்வொரு அக்கிரமத்துக்கும் ஆப்பு அடித்தவர் பாலு. ஜெயலலிதாவை அடக்க பாலு எடுத்த நடவடிக்கைகளை சிறையில் இருந்தபோது பத்திரிக்கைகளில் படித்து மகிழ்ந்தவன் நான். மமதை பிடித்தவர்களை அடக்க சரியான ஆள் பாலு. அவரை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்லச் செய்வோம்.

தமிழ்நாடு பூராவும் அதிமுக வேட்பாளர்களை மக்கள் ஊருக்குள்ளேயே அனுமதிக்க மறுத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு ஆட்சி நடத்தியிருக்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு அரசியல் அழிவு நிச்சயம் என்றார் வைகோ.

முன்னதாக வைகோ பேசிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்து மாலை தொழுகைக்கான பாங்கு ஒலிக்கப்பட்டது. இதைக் கேட்ட வைகோ, தனது பேச்சை நிறுத்திவிட்டு அமைதியாக நின்றார்.

பின்னர் தாம்பரம் பகுதியில் வைகோ பேசினார். கடும் மழையிலும் திறந்த ஜீப்பில் முண்டாசு கட்டிக் கொண்டு பாலுவுடன் அவர் பிரச்சாரம் செய்தார். மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் திரண்டிருந்து வைகோவை வரவேற்றனர்.

ஆனால், இப் பகுதியில் மதிமுகவினர் கட்டியிருந்த கொடிகள், வரவேற்பு வளைவுகளை போலீசார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய வைகோ, போலீசாரை வைத்து ஜெயலலிதா அடக்குமுறை ஆட்சி நடத்த முயல்கிறார். உங்கள் அடக்குமுறைக் கூட்டணியை மக்களுடன் கூட்டணி சேர்ந்து முறியடிப்போம். எந்த அடக்குமுறைக்கும் அஞ்ச மாட்டோம்.

போலீசார் நடுநிலையாக நடந்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளை எதிர்காலத்தில் சந்திப்பீர்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+