புலிகள் மீதான தடை தொடரும்: உள்துறை அமைச்சர்
பெங்களூர்:
விடுதலைப் புலிகள் மீதான மீதான தடை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மத்திய அரசு விதித்துள்ள தடை தொடரும். இப்போதைக்குவிடுதலைப்புலிகளுக்கு எதிரான எங்களது கொள்கையில் எந்தவித மாற்றமுமில்லை.
புலிகளுக்கு எதிரான தடையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகோரிக்கை விடுத்துள்ளது அவரது சொந்தக் கருத்தாகும்.
அண்மையில் தான் புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளது. தடையை தொடர வேண்டுமா? வேண்டாமா?என்பதை எதிர்காலத்தில் அரசு முடிவு செய்யும்.
பொடா சட்டத்தை ரத்து செய்வதற்கு கால நிர்ணயம் செய்ய முடியாது. ரத்து செய்யப்படும்போது ஜம்மு-காஷ்மீரிலும்இது ரத்து செய்யப்படும்.
பொடா சட்டத்தை ரத்து செய்வதால் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கிவிடும் என்பது சரியல்ல.
தீவிரவாதிகளுக்கு எதிராக இப்போதுள்ள சட்டங்களே கடுமையாகப் பயன்படுத்தப்படும் என்றார் சிவராஜ்பாட்டீல்.