ரேஷன் கார்டு: மக்களிடம் விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் சத்துணவுப் பணியாளர்கள்
சென்னை:
புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களைப் பெற சில சத்துணவு அமைப்பாளர்கள் மறுத்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் பூர்த்தி செய்து அருகில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் கொடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஏராளமான பொதுமக்கள் குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வருகிறார்கள். ஆனால் சில சத்துணவு மையங்களின் அமைப்பாளர்கள் விண்ணப்பங்களை ஏற்க மறுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே ஏராளமான பணிகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந் நிலையில், இதையும் எப்படிப் பார்ப்பது என்று கேட்கும் அவர்கள் தங்களிடம் மனுக்களுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்புகிறார்கள்.
இதனால் பல இடங்களில் சத்துணவு அமைப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது.
சத்துணவு அமைப்பாளர்களின் இந்தப் போக்கினால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.