சுப. இளவரசன் மீது பொடா வழக்கு?
சென்னை:
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசன் மீது பொடாவில் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் பொடாவில் சிறையில் அடைக்கப்படலாம்.
தமிழக, கர்நாடக வனப் பகுதியில் வைத்து சுப. இளவரசனை அதிரடிப்படை போலீஸார் பிடித்ததாகக் கூறுகின்றனர். ஆனால், அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே போலீசாரிடம் சரணடைந்துவிட்டதாகவும், இப்போது தான் அதை கைது போல போலீசார் காட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுகிறது.
போலீஸ் விசாரணைக்குப் பின்னர் சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், வெள்ளிக்கிழமை அவர் திடீரென்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சில குண்டு வெடிப்பு வழக்குகளுக்காக அவரை கைது செய்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்த போலீசார், அது குறித்து விசாரிக்க இளவரசனை சென்னையில் வைத்திருக்க வசதியாக, சென்னை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இதையேற்ற நீதிபதி அவரை மத்திய சிறையில் அடைக்கவும், வரும் 9ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே இளவரசன் மீது போலீசார் பொடாவில் வழக்குப் பதிவு செய்யலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்கு வசதியாகவே அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
முன்பு நக்கீரன் ஆசிரியர் கோபாலை சாதாரண வழக்கில் கைது செய்துவிட்டு, பின்னர் அவர் மீது போலீசார் பொடா வழக்கு போட்டது குறிப்பிடத்தக்கது.