காவிரி: பிரதமருடன் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் சந்திப்பு
டெல்லி:
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது.
மக்களவை, மாநிலங்களைவையைச் சேர்ந்த 59 எம்.பிக்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
திமுக தலைமை நிலையச் செயலாளர் துரைமுருகன் தலைமையிலான இந்தக் குழுவில் அதிமுக ராஜ்யசபா எம்.பிக்களும் பங்கேற்றனர். இந்த இரு கட்சியினரும் இணைந்து பிரதமரை சந்திப்பது இதுவே முறையாகும்.
இந்தக் குழுவில் திமுக, காங்கிரஸ், பா.ம.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை எம்.பிக்களும், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மக்களவை எம்.பிக்கள், அதிமுக, திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பிக்களுமாக மொத்தம் 59 பேர் இடம் பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் காவிரி டெல்டாவில் நிலவும் பயங்கர வறட்சி, கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் குறுவை, சம்பா சாகுபடி, விவசாயிகள் அடைந்து வரும் துயரம் ஆகியவற்றை இந்தக் குழுவினர் பிரதமரிடம் விளக்கினர்.
கர்நாடக அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், கர்நாடகத்தில் தடையின்றி நடந்து வரும் விவசாயப் பணிகள், தமிழகத்துக்கு சட்டப்படி கிடைத்திருக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவை குறித்தும் இக் குழு புள்ளி விவர விளக்கம் தந்தது.
உடனடியாக தண்ணீர் திறந்துவிடாவிட்டால் காவிரிப் பாசன விவசாயிகளின் நிலையும், தமிழகத்தின் உணவு சப்ளைக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் விவரமாய் எடுத்துச் சொன்ன இந்தக் குழு உடனே தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரினர்.
சுமார் 30 நிமிடம் இச் சந்திப்பு நடந்தது.
மணிசங்கர அய்யர் பேட்டி:
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சரும் மயிலாடுதுறை எம்.பியுமான மணிசங்கர் அய்யர், எங்களைத் தொடர்ந்து கர்நாடக எம்.பிக்கள் குழுவும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளது.
அதன் பின்னர் பிரதமர் முடிவெடுப்பார். இந்த விஷயத்தில் எங்களுக்கு பிரதமர் மீது முழு நம்பிக்கை உள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் தலைவர் என்ற முறையில் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
நடுவர் மன்றமும் அவ்வப்போது கூடி நிலைமையை விவாதிக்க வேண்டும் என்றார்.
துரைமுருகன்:
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்தை வலியுறுத்துவேன் என பிரதமர் உறுதிமொழி அளித்ததாக துரைமுருகன் கூறினார்.
அவர் கூறுகையில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உடனடியாக தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் மிக அதிகமான கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் வந்தால் தான் இந்த முறையாவது குறுவை நெல்லை சாகுபடி செய்ய முடியும் என்றார்.
பிரதமரிடம் மனு:
முன்னதாக இந்தக் குழு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கிய மனுவில்,
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் எப்போதுமே மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கர்நாடகம் வழக்கம்போல இந்த ஆண்டும் நீர் தர மறுப்பதால், திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தஞ்சைக்கு நீர் திறந்துவிட முடியாத சூழல் நிலவுகிறது.
1991ம் ஆண்டில் நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பைத் தந்தாலும் அதை கர்நாடகம் மதிக்காமல் இருந்து வருவது வேதனைக்குரியது. இதனால் விவசாயப் பணிகளே ஸ்தம்பித்துப் போய்விட்டன. பயிர்களை இழந்து பல லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.