எதிர்க் கட்சிகள் கூச்சல், குழப்பம்: அவைகள் ஒத்திவைப்பு
டெல்லி:
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கூச்சலால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று காலை ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும்போது, குற்ற வழக்குகளில் தொடர்புடைய ராஷ்டிரீய ஜனதா தள எம்.பிக்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது குறித்து பிரச்சனை எழுப்புவோம் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தன.
இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தப் பிரச்சனை பலமாக எதிரொலித்தது. அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக குரல் எழுப்பின. பதிலுக்கு ராஷ்ட்டீய ஜனதா தளத்தினரும் குரல் தந்தனர்.
துணைப் பிரதமராக இருந்த அத்வானி மீது பாபர் மசூதி இடிப்பு வழக்கு இல்லையா, தெகல்கா, ஆயுத ஊழலில் சிக்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக நீடிக்கவில்லையா என அவர்கள் பதிலுக்குக் கத்தினர்.
இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இதனையடுத்து மக்களவை இரண்டு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.