கர்நாடக முதல்வருடன் திமுக கூட்டணி சந்திப்பு: நீர் கிடைப்பது உறுதியில்லை
சென்னை:
குறுவை நெல் சாகுபடிக்காக காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் தரம்சிங்கை,திமுக கூட்டணிக் கட்சிக் குழு இன்று காலை சந்தித்து கோரிக்கை விடுத்தது.
ஆனால், தண்ணீர் விடுவது தொடர்பாக தரம்சிங் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.
விதான செளதாவில் நடந்த இச் சந்திப்புக்கு முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமைவகித்தார்.
7 பேர் அடங்கிய இந்தக் குழுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மதிமுக அவைத் தலைவர்எல்.கணேசன், மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, இந்திய யூனியன்முஸ்லீம் லீக் எம்.பியான காதர் மொய்தீன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இச் சந்திப்பின்போது கர்நாடக துணை முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேஆகியோரும் உடனிருந்தனர்.
அப்போது தமிழகத்தில் காவிரிப் படுகையில் நிலவும் வறட்சி நிலையையும், கடந்த மூன்றாண்டுகளாக சம்பா,குறுவை நெல் சாகுபடியே மொத்தமாக முடங்கிக் கிடப்பதையும் இந்தக் குழு கர்நாடக முதல்வரிடம் விளக்கியது.
இந்த ஆண்டு குறுவை நெல்லைக் காப்பாற்ற உடனடியாக தண்ணீர் விட வேண்டும் என்று வலியுறுத்திய இக் குழுஅது தொடர்பாக மனுவையும் அளித்தது.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தரம்சிங், தமிழக குழுவினரின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டோம். ஆனால், நீர் விடுவது குறித்து எந்த உறுதிமொழியும் தரவில்லை. இப்போது சட்டமன்றக் கூட்டம்நடந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் அரசு இந்த விஷயத்தில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. சட்டமன்றத்தின்அனுமதியுடன் தான் எதையும் செய்ய முடியும்.
பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிய மத்திய நிபுணர் குழுவும் தற்போது கர்நாடக, தமிழக அணைகளைப்பார்வையிட்டு வருகிறது. அந்தக் குழுவின் அறிக்கையையும் பார்த்த பின்னரே எதுவும் சொல்ல முடியும் என்றார்தரம்சிங்.
தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்பதில் கர்நாடகம் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.