சென்னை மாநகராட்சியில் பாயில் அமர்ந்து பணியாற்றிய அதிகாரி !
சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உட்கார இருக்கை கொடுக்காததால் கோபமடைந்த அதிகாரி, பாயை எடுத்து வந்து தரையில் போட்டு அமர்ந்து பணியாற்றி பரபரப்பை ஏர்படுத்தினார்.
சென்னை மாநகராட்சி உள்ளாட்சி நிதித் தணிக்கைப் பிரிவில் துணை ஆய்வாளராகப் பணியாற்றுபவர் ராஜேஷ். ஒரு வருடமாக இந்தப் பிரிவில் ராஜேஷ் பணியாற்றி வருகிறார். ஆனாலும் இவருக்கு உட்கார தனி இருக்கை கூட வழங்கப்படவில்லை.
ஏதாவது இருக்கை காலியாக இருந்தால் அங்கு அமர்ந்து பணி செய்யுமாறு உயர் அதிகாரிகள் கூறி வந்ததால், அவ்வப்போது காலியாகும் இருக்கையில் அமர்ந்து பணியாற்றி வந்துள்ளார் ராஜேஷ்.
தனது அவல நிலை குறித்து உயர் அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தப் பலனும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்த ராஜேஷ் அதிரடியாக ஒரு முடிவை எடுத்தார்.
வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு வரும்போது கையோடு ஒரு பாயை எடுத்து வந்தார். அலுவலக அறையில் பாயைத் தட்டி, விரித்துப் போட்டு அமர்ந்து தனது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.
பாயுடன் தரையில் அமர்ந்த ராஜேஷப்ை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் உயர் அதிகாரிகளுக்குப் பறந்தது. விரைந்து வந்த அவர்கள் ராஜேஷை சமாதானப்படுத்தினர். ஒரு வருடமாகக் கேட்டும் கிடைக்காத இருக்கை அடுத்த நிமிடத்தில் வந்து சேர்ந்தது.
தனது போராட்டம் குறித்து ராஜேஷ் கூறுகையில், என்னை ஒரு வருடமாக அவமானப்படுத்தி வந்தனர். அவர்களுக்கு எனது நிலையை புரிய வைக்கவே இவ்வாறு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications