568 பேரூராட்சிகளை ஒழித்து தமிழக அரசு உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 611 பேரூராட்சிகளில் 568 பேரூராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துக்களாக தகுதி குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 43 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, பேரூராட்சிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதில்லை. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஆகிய மூன்றடுக்கு பஞ்சாயத்து முறைக்கு மட்டுமே பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது.
இதனால் பேரூராட்சிகளுக்கு போதிய நிதி கிடைப்பதில்லை. இந் நிலையில் இவற்றை கலைத்து விட தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், பேரூராட்சிகளின் வருவாய், வரி வசூல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு 43 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியுள்ளது. மற்ற 568 பேரூராட்சிகளும் தரம் குறைக்கப்பட்டு கிராமப் பஞ்சாயத்துக்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தரம் குறைக்கப்பட்ட பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை. தரம் குறைக்கப்பட்ட பேரூராட்சிகளுக்கு இனிமேல் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும் என்பதால் அவற்றின் நிர்வாகம் மேம்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.