அரசு பள்ளியில் 10,000 பாடப் புத்தகங்கள் தீயில் கருகி நாசம்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 10,000 அரசுப் பாடப் புத்தகங்கள் தீவிபத்தில் கருகி சாம்பலாயின.
மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,000 அறிவியல் தமிழ் பாடப் புத்தகங்கள் விநியோகத்திற்காக வகுப்பறை ஒன்றில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் இந்த அறையில் திடீர் என்று தீபிடித்துக் கொண்டது. ஆனால் பள்ளியின் காவலர் அப்போது அங்கு இல்லாததால் தீவிபத்து குறித்த தகவல் தீயணைப்புப் படையினருக்கு உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. பள்ளிக்கு அருகில் வசிப்போர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்.
இருப்பினும் அவர்கள் தாமதமாக வந்ததால், பாடப் புத்தகங்கள் அனைத்தும் சாம்பலாகி விட்டன. வகுப்பறையில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுக்கிறார்கள்.
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் தமிழ் பாடத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்தப் பாடத்தை தேர்வுப் பட்டியலில் அரசு சேர்க்கவில்லை. இதனால் மாணவர்களும், பள்ளிகளும் அறிவியல் பாடப் புத்தகத்தை வாங்குவதில் விருப்பம் காட்டவில்லை. இதனால் அறிவியல் பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு வராமல் தேங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications