தமிழகத்தில் 43 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பந்தாடல்
சென்னை:
தமிழகம் முழுவதும் 43 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் பந்தாடப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் தோல்வியைடுத்து மாவட்ட கலெக்டர்கள் பலரையும் இடம் மாற்றியது தமிழக அரசு. பலருக்கு பதவிகளைத் தராமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது.
இப்போது மீண்டும் பல கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த சித்திக், அருங்காட்சியக இயக்குனராக டப்பா பதவிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் கமிஷனுக்கு இவராகவே சில விவரங்களைத் தந்ததால் இவர் மீது கடுப்பில் இருந்தது அரசு.
விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த கோபால் சென்னையிலும், மதுரை முன்னாள் கலெக்டர் சந்திரமோகன் நெல்லையிலும் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்களாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளனர்.
கரூர் கலெக்டராக இருந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த அண்ணாமலைக்கு தமிழக தேர்தல் ஆணைய கூடுதல் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. திண்டுக்கல் கலெக்டராக இருந்த செந்தில் குமார் தலைமை இணை தேர்தல் அதிகாரியாக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை கலெக்டராக இருந்து ஹிதேஸ்குமார் மக்வானாவுக்கு இறங்கு முகமே. அவர் சமூகப் பாதுகாப்பு இயக்குனராக்கப்பட்டுள்ளார்.
தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனராக இருந்த தீனபந்துவுக்கு கால்நடைப் பணி இயக்குனராக உயர்வு கிடைத்துள்ளது.
திருவாரூர் கலெக்டராக இருந்த சுந்தரமூர்த்திக்கு விவசாயத்துறை துணைச் செயலாளராக இறங்கு முகம்.
சேலம் கலெக்டராக இருந்த ராமச்சந்திரன், தொழில்துறை துணைச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி முன்னாள் கலெக்டர் ராஜாராமனுக்கு சிவில் சப்ளைஸ் கூடுதல் ஆணையர் பதவி தரப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜீவரத்தினம், மீன்வளத்துறை இயக்குனராக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத்துறை முன்னாள் ஆணையர் ராமலிங்கம், நிதித்துறை சிறப்புச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
வேளாண்மைத்துறை இயக்குனராக இருந்த கெளரி சங்கர் திட்டக் கமிஷன் உறுப்பினராகவும், நகராட்சிகள் நிர்வாகச் செயலாளராக இருந்த விஜயராகவன், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத் தலைவராக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை செயலாளரான அருண் ராமநாதனுக்கு டப்பா பதவியான ஆவண காப்பகத்துறை சிறப்பு ஆணையர் பதவி தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய தலைவராக இருந்த ஸ்ரீதர், தொல்பொருள் துறை சிறப்பு ஆணையராக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சிக்காரர்களுக்கு ஒத்துப் போகும் அதிகாரிகள் முக்கிய இடங்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.