அதிமுக: தோற்றார்கள்.. வாரியத் தலைவரானார்கள்
சென்னை:
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற15 அதிமுக வேட்பாளர்களுக்கு பல்வேறு வாரியத் தலைவர் பதவிகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அமைச்சர் பதவிக்கு அடுத்தபடியாக செல்வாக்கு நிறைந்தது வாரியத் தலைவர் பதவி. இதைப் பிடிக்க கடும் போட்டா, போட்டி நிலவும். ஆனால், இம் முறை ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சில வாரியங்களைத் தவிர மற்றவற்றுக்கு கட்சிக்காரர்களை நியமிக்கவில்லை.
வாரியத் தலைவர் பொறுப்புக்களில் அதிகாரிகளே நியமிக்கப்பட்டனர். இந் நிலையில் சமீபத்திய தேர்தல் மெகா தோல்விக்குப் பின் கட்சிக்காரர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளார்.
கட்சியில் இருந்தும் ஆட்சியின் பலன்களை அனுபவிக்க முடியவில்லை என அதிமுகவினர் சோக கீதம் பாடியதையடுத்து இப்போது வாரியத் தலைவர் பதவிகளில் கட்சியினரை நியமித்துள்ளார்.
இதில் ஹை-லைட்டான விஷயம், 15 வாரியத் தலைவர் பதவிகளுக்கு சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்தவர்களை நியமித்துள்ளது தான்.
தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பதர் சயீதுக்கு உடனடியாக வக்ப் வாரியத் தலைவர் பதவியைத் தந்த ஜெயலலிதா, சிறிது கால தாமதத்துக்குப் பின் வட சென்னை மாவட்ட அதிமுகக செயலாளர் பாலகங்காவுக்கு குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவியைத் தந்தார்.
இந் நிலையில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு சிமென்ட் நிறுவன தலைவராகவும், தஞ்சாவூரில் போட்டியிட்ட தங்கமுத்து தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவராகவும்,
திண்டுக்கல்லில் போட்டியிட்ட ஜெயராமன் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மீன் வள வாரியத் தலைவராக திருநெல்வேலியில் போட்டியிட்டுத் தோற்ற அமிர்த கணேசனும், திண்டிவனத்தில் போட்டியிட்ட அருள்மொழித் தேவன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்ற மொத்தம் 15 பேர் வாரியத் தலைவர்களாகியுள்ளனர்.
இவர்களைத் தவிர, முன்னாள் எம்.பியான ஆதிராஜாராம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications