ராஜ்யசபா தேர்தல்: வென்றாலும் உறுதியில்லை
சென்னை:
மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 6 வேட்பாளர்களுக்கும், 21ம் தேதி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்போது, உங்களது தேர்வு உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற ஒரு உத்தரவின் நகலும் தரப்படும்.
இந்தியாவின் எந்த மாநிலத்தையும் சேர்ந்தவர்கள், எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் ராஜ்யசபாவுக்கு போட்டியிடலாம் என்ற முறையை எதிர்த்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே மாநிலங்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் முடிவுகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் கூறியிருந்தது.
இந் நிலையில், வரும் 21ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்தும் 65 பேர் ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படும்போது, உங்களது தேர்வு உச்ச நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டது என்ற உத்தரவு நகலும் வழங்கப்படும்.
பின்னால், இந்தத் தேர்தலை உச்ச நீதிமன்றம் ஒருவேளை ரத்து செய்தால் இவர்கள் பதவியை இழப்பார்கள்.












Click it and Unblock the Notifications